அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 28, 2009

பிடித்த பத்தும், பிடிக்காத பத்தும்.

நண்பர் கேபிளார் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.


1.அரசியல்வாதி
பிடித்தவர் : இன்னும் பிறக்கவில்லை

பிடிக்காதவர்: இன்னும் சாகலிங்கோ.

2. நடிகர்

பிடித்தவர் : சிவாஜி அல்ல (அவர் எங்கே நடித்தார்...............வாழ்ந்தல்லவா காண்பித்தார்)

பிடிக்காதவர் : ..........(சாரி, லிஸ்ட் கொஞ்சம் பெரிசு)

3. நடிகை

பிடித்தவர் : ..............(மனைவிகிட்ட மாட்டிக்க மாட்டேனே!)

பிடிக்காதவர் : பழம்பெரும் நடிகைகள் தவிர எல்லோருமே.

4. இயக்குனர்:

பிடித்தவர் : நிகழ்காலம் : பாலச்சந்தர்/பாக்கியராஜ் எதிர்காலம் : கேபிள் ஷங்கர் (ஜால்ரா இல்லீங்கோ.....)

பிடிக்காதவர் : டி. ஆர். (அவர் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காருல்ல.....?)

5. கவிஞர்

பிடித்தவர் : ஹி...ஹி... தன்னடக்கம் தடுக்குது.

பிடிக்காதவர் : நவரத்தினங்களில் இரண்டு சேர்ந்துள்ளவர்

6. எழுத்தாளர்

பிடித்தவர் : பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் : யாருமில்லை

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : என்றென்றும் எம்.எஸ்.வி.

பிடிக்காதவர்: தேவா (ஒரிஜினல் கம்மி என்பதால்)

8. டி.வி. சானல்:

பிடித்தது : பொதிகை

பிடிக்காதவர் : போட்டி சானல்கள் எல்லாமே.

9. காமெடியன்:

பிடித்தவர் : மருத்துவர் (காமெடியன் சினிமாவுல மட்டும்தான் இருக்கணுமா?)

பிடிக்காதவர் : இப்போதைய விவேக்

10. பதிவர்

பிடித்தவர் : நம்ம பதிவைப் படிக்கும் எல்லோருமே.

பிடிக்காதவர் : பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடுறார் பாருங்க.......அவர்தான்!

ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

டோண்டு

படுக்காளி

அடலேறு

எடக்குமடக்கு

Thursday, November 26, 2009

“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி...

ஒரு கதைப் போட்டிக்கு நான் அனுப்பியுள்ள என் கதை, இதோ:
மற்றவலைப்பதிவர்களும் தங்கள் கதைகளை அனுப்ப வேண்டுகிறேன்.

ஒருதலைக் காதல் - புதிரா புனிதமா?

"நீயெல்லாம் ஆம்பளையாடா?" நூறாவது முறையாக கேட்டான் ரமேஷ்.

"நான் என்னடா செய்யறது? ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்போது கேக்கனும்னு தோணுது, ஆனா, ....", இது சுரேஷ்.
"என்னடா ஆனா... இதப் பாரு, காதல் கூடாது, பண்ணிட்டா, அத சொல்றதத் தள்ளிப் போடக் கூடாது. புரியுதா?"
சுரேஷ் ஒரு பெண்ணை (அவ பெயர் கூட தெரியாது) ஒருதலையாகக் காதலித்துக் கொண்டு வருகிறான். அவளை முதன் முதலில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் சந்தித்தான், அவன்.
************
ஒரு ஆறு மாதத்திற்கு முன், ஒரு நாள், அவனுக்கு எல்லாமே ஏமாற்றம் தருவதாகவும், அவநம்பிக்கையாகவும் இருந்தது. இருக்கும் வெறுப்பில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட யோசித்த்துக் கொண்டிருந்தான். விதியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவன் கண்ணில் மின்னல் போல் தென்பட்டாள் அவள். பவுர்ணமி நிலவைப் போன்ற அழகிய வட்ட முகமும் அகன்ற படபடக்கும் கண்களும், சற்று உப்பல் கன்னங்களுடன் திருத்திய மூக்கும்.....ஒரு ஆடவனின் கண்ணை இழுக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் அவளிடம் இருந்தன.

அந்த ஒரு நொடிப் பொழுதில் உலகில் உள்ள அத்தனை செல்வங்களும் தனக்கே சொந்தமானது போல் சுரேஷின் உள்ளம் குதூகலித்தது. அவளைச் சந்தித்த கண்கள் இனி மற்றோருத்தியைக் கண்டு மயங்குமா என்று உள்ளம் பேதலித்தது. அதற்குள் அவள் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து விடவும் அவள் பஸ்ஸில் ஏறிவிட்டாள். அன்றே இவன் மனத்திலும் ஏறிவிட்டாள்.

அதன்பின் ஒவ்வொரு நாளும் அந்தப் பேருந்து நிலையத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டான், சுரேஷ். விவரமறிந்த ரமேஷும் அவன் கூட அங்கு வந்து விடுவான். "மாப்ள, உன் செலக்சன் சூப்பர், உனக்கு எத்த பொண்ணுதான்", என்று காதலை ஊக்குவித்தவனும் அவன்தான்.
**********

"என்னடா, யோசனை? இங்க பாரு, நீ நல்ல வேலையில் இருக்க, ஆள் பார்க்கவும் அம்சமாத்தான் இருக்க, நேர போய், அவகிட்ட உன் காதலைச் சொல்லிடு."
"நீ சொல்றதும் சரிதாண்டா, நானும் அவகிட்ட அதப் பத்தி பேசலாம்னுதான் பார்க்கிறேன், அவ மாட்டேன்னு சொன்னாக் கூட பரவாயில்லை, ஆனா, இதுனால, தினம் கிடைக்கற அவ தரிசனம் கூட கிடைக்காம போயிட்டா என்ன செய்றதுன்னு தான் தயக்கமா இருக்கு" என்றான் சுரேஷ்.
"சீ, முட்டாள்! உன் தயக்கத்தில கொள்ளி வைக்க! ஒன்னு அவகிட்ட போய் உன் மனசில இருக்கிற காதலைச் சொல்லு, இல்ல, என்ன மாதிரி தூரத்தில இருந்து ரசிக்கிறதோட மட்டும் இருந்துடு. இப்படி இருதலைக் கொள்ளி இரும்பா இருக்கற உன்னைப் பார்த்து கோவம், கோவமா வருது" திட்டிவிட்டு போய்விட்டான் ரமேஷ்.
உண்மைதான், ரமேஷும் சுரேஷைப் போல் பார்க்க வசீகரமானவந்தான், ஆனால், காதல் கத்தரிக்காய் என்று வலையில் விழாமல், வெறும் சைட் அடிப்பதோடு சாமர்த்தியமாக காலத்தைக் கழிப்பவன் அவன்.
**********
இன்று எப்படியும் தன் காதலைச் சொல்லிவிடுவது என்ற மனத்துணிவுடன், பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான் சுரேஷ். ரமேஷ் எதோ வேலையாக வெளியூருக்குச் சென்றிருந்ததால் அவன் வரவில்லை. வழக்கமான நேரத்திற்கு அவனுடைய தேவதை வந்தாள், அன்று அவனுக்குப் பிடித்த நீல வண்ணச் சேலையில் வந்தது தற்செயலா அல்லது அவன் மன ஓட்டம் அவளுக்குத் தெரிந்து விட்டதா என்று ஒரு சந்தோஷக் குழப்பம் சுரேஷுக்கு. அது மட்டுமின்றி அவள் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலவும் தோன்றியது. அவள் பஸ் வந்ததும், இவனும் ஏறிக் கொண்டான். அவள் செல்லும் இடத்திற்கே டிக்கெட் எடுத்தான். எப்படிப் பேசுவது என்று மனத்திற்குள் ஒத்திகையும் பார்த்துக் கொண்டான். அவள் இறங்கினாள், இவனும் இறங்கிவிட்டான். அவளும் இவனைக் கவனித்துவிட்டால், மெதுவாக நடந்து கொண்டிருந்தவள் பக்கத்தில் போய், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று, "ஹ...." என்பதற்குள் அவளே "ஹலோ" என்றாள். இவன் கால் தரையில் இல்லை.

"கிட்டத் தட்ட ஒரு ஆறு மாசமா உங்களை பார்க்கிறேன்", இவன் வானில் பறந்தான்.
"உங்க கூட ஒரு ப்ரெண்டும் இருப்பாரே" அவள் கேட்க, இவன் வியந்தான் ("அட, அதையும் கவனிச்சாளா")
"இத எப்படி சொல்றதுன்னு தெரியல, வந்து, நீங்க என்னைத் தப்பா நினைக்கலைன்னா,....."இவன் மேகத்தின் ஊடே மிதந்தான். கைப்பையைத் திறந்தவள், ஒரு கவரை எடுத்தாள். அவனிடம் கொடுத்தாள், "இந்த கவரை உங்க நண்பரிடம் கொடுக்கிறீங்களா?"
"இதுல என்ன இருக்கு?" குழப்பமாகக் கேட்ட சுரேஷிடம்,
"லவ் லெட்டர். நான் அவரை லவ் பண்றேன்," என்றாள்.
***********

நீதி: கண்ணா, சிங்கம் மட்டுமில்ல, பன்னிகூட "சிங்கிளா" வந்தாதான் காதல் கைகூடும், பிரென்டக் கூட்டிகிட்டு வந்த, நீ தூதுவன்தான், இது எப்டி இருக்கு?