சௌந்தர் அவருடைய
இந்தப் பதிவில் என்னை இந்தத் தொடருக்கு அழைத்திருந்தார். ஒரு நடிகன் என்பதைவிட ஒரு மனிதன் என்ற முறையில் என்னை மிகவும் கவர்ந்த ரஜினியின் படங்களில் நான் சிறந்ததாய் கருதும் பத்து படங்கள் இதோ(வரிசை எல்லாம் கிடையாது, எல்லாமே என் மனத்தைக் கவர்ந்தவைதான்):-
முரட்டுக் காளை
ஒரு சாதாரண கிராமத்தானாக தம்பிகள் மீது பாசம் காட்டும் அதே நேரம் நீதிக்கு போராடும் ஒரு மனிதன். இந்தப் படத்தின் மீதான ஈர்ப்பு அதிமானதுக்குக் காரணம் பின்னாளில் கல்கி இதழில் ஏ.வி.எம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டிதான். அதில் சொல்லியிருந்தார்:
இந்தப் படத்திற்காக ரஜினியை அணுகியபோது வில்லனாக யார் நடிக்கிறார் என்று கேட்டார். ஜெய்சங்கர் என்று சொன்னேன். "அவர் பெரிய நடிகர் ஆயிற்றே. பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். அதனால், இந்தப்பட விளம்பரங்களில் எனக்கு இணையாக அவரையும் வெளிப்படுத்தவேண்டும். போஸ்டர்களில் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவருக்கும் கொடுக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், இந்த படத்திற்கு அவர் கேட்ட சம்பளம் அந்த நாளில் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அவருக்கு கொடுத்து விட்டேன். பின்னர் படம் வெளியாகும் சமயத்தில் அவரே என்னைக் கூப்பிட்டு "சார், நான் கேட்ட தொகை கொஞ்சம் அதிகம் என்று நான் நினைக்கிறேன். அதனால் தவறாக நினைக்காமல் அந்த அதிக தொகையை நீங்கள் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.
வேறு எந்த நடிகருக்கும் இது போன்ற பெருந்தன்மை இருக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, நிஜ வாழ்விலும் ஒரு ஹீரோவாகவே ரஜினி எனக்குத் தோன்றுகின்றார்.
ஆறிலிருந்து அறுபது வரை
என் சிறு வயதிலேயே என்னை அசத்திய படம். தன் தம்பி தங்கைக்காக கஷ்டப்பட்டு உழைத்து பின் அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்படும் போது அவருடைய முக பாவங்கள், சூப்பர்! பின்னாளில் பணக்காரனாகியபின் அவர்களே வந்து அவரிடம் நிற்கும் சூழ்நிலை, மிகச் சிறந்த படம் இது. என் உயர்விற்கு உதவிய என் அண்ணன்கள் மீது எனக்கு மதிப்பு ஏற்பட இந்தப் படம் பார்த்த பாதிப்பு ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். "ஏற்றிவிட்ட ஏணியை ஒரு நாளும் மறக்கக் கூடாது"என்ற படிப்பினையை ஊட்டும் படம்.
நல்லவனுக்கு நல்லவன்
முதல் பாதியில் ரௌடியாக வந்து விட்டு இரண்டாம் பாதியில் ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக ரஜினியை இரு வேறு பரிமாணங்களில் காட்டிய படம். மனைவி சொல்லுக்காக சண்டை போடாமல் அடிவாங்கி வந்துவிட்டு, "உங்களை அடிக்க வேண்டாம்னுதான் சொன்னேனே தவிர, ஒரு கோழையாக இருங்கன்னு சொல்லலையே"என்று சொன்னவுடன் அதே ரௌடிகளை போட்டு வெளுப்பாரே, அந்த இடம் இன்று நினைத்தாலும் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். மனைவி இறந்தவுடன், "அம்மா சாவை ஏம்பா சொல்லலை?" என்று கேட்ட மகளிடம் "கல்யாணத்துக்கு கூப்பிட்டாதான் போகணும், சாவு வீட்டுக்கு கூப்பிடாமலே போகணும், நீ கல்யாணத்துக்கும் கூப்பிடலை, உன் அம்மா சாவுக்கும் வரலை" என்ற வசனம் எந்த ரசிகனுக்கும் கண்ணில் நீர் வரவழைக்கும். படம் முடிந்து வெகு நேரம் என்னை பாதிப்பில் ஆழ்த்திய படம் இது.
ராஜாதி ராஜா
ஒரு அற்புதமான இரட்டை வேடக் கதை. போக்கிரி ராஜாவும் கிட்டத்தட்ட இதே கதைதான் என்றாலும், இந்தப் படத்தில் ரஜினியின் காமெடி ரசிக்க வைக்கும்.
க்ளைமாக்சில் "என்ன தூக்குல போட மாட்டாங்கன்னு தெரியும், ஏன்னா, நான் தப்பே பண்ணலையே" என்று சொல்லும் அப்பாவி ரஜினியை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது. தப்பு செய்யாத ஒருவன் எவருக்கும் எக்காலத்திலும் பயப்பட வேண்டியதில்லை என்பது சத்தியமான வரிகள்.
தில்லு முல்லு
இந்த தலைப்பை எழுதும்போதே மகிழ்ச்சி மனத்தில் நிறைந்து விடுகிறது. ஒரே ஒரு பொய், அதுவும் தான் செய்த தப்பை மறைக்க சொல்லி, அதன் விளைவாக நிறைய பொய்கள்.........அடுக்கடுக்காக அதன் விளைவுகள். இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு மிளிர்ந்ததற்குக் காரணம் தேங்காய் சீனிவாசன் மற்றும் சௌகார் ஜானகி அவர்களும்தான். குறிப்பாக, ரஜினி வீட்டில், "உங்க தலைல அடிபட்டது இப்போ எப்படி இருக்கு?" என்று தேங்காய் கேட்க, "சொல்லவே இல்லையேப்பா" என்று சொல்லிவிட்டு, சமாளிக்கும் விதமாக, "எனக்கு அடிபட்டத இவர்கிட்ட சொன்னேன்னு என்கிட்டே சொல்லவே இல்லையேப்பா" என்று ஜானகி சொல்ல, "இப்போ எவ்வளவோ பரவாயில்ல சார்" என்பாரே ரஜினி, டாப் கிளாஸ்! அந்த இன்டர்வியூ சீன், படத்தில் உச்சகட்ட காமெடி.
மிஸ்டர் பாரத்
ரஜினி ரசிகனாகவே என்னை மாற்றிய ஒரு படம். வழக்கமான பழி வாங்கும் கதைதான் என்றாலும் என்ன இருந்தாலும் தன் தகப்பன் என்ற முறையில் மற்றவர்களிடம் சத்யராஜ் மரியாதை இழக்கக் கூடாது என்பதில் உறுதி காட்டி க்ளைமாக்சில் அவர் உயிரையும் காப்பாற்றும் டிபிகல் மசாலா படம். சத்யராஜின் மகளைக் காப்பாற்றும் பொழுது கையில் காயம் பட, சத்யராஜ் "அது என்ன ரத்தம்" என்று கேட்க, என் ரத்தம்தான் என்று ரஜினி சொல்வார். உடனே, சத்யராஜ், "என் ரத்தமோன்னு நினைச்சேன்," என்று கலாய்க்க, "உங்க ரத்தம்தான்" என்பாரே, அந்த சீன் என் மனதில் இன்னமும் நிற்கிறது.
பில்லா
ஒரே படத்தில் டானாகவும் அப்பாவியாகவும் மிக அருமையாக பிரித்துக் காட்டிய படம் இது. ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தந்த மற்றுமொரு படம் என்றே நான் கருதுகிறேன். ஹிந்தி டான் படமும் நான் பார்த்து இருக்கிறேன், ஆனால், பில்லா என்னைக் கவர்ந்த அளவு அந்தப் படம் கவரவில்லை.
படிக்காதவன்
அண்ணியால் துரத்தப்பட்டு தம்பியையும் தன்னை வளர்த்தவரின் குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவன் கதை. தன் தம்பி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி தன் அண்ணன்தான் என்று தெரிய வரும்போது அவரின் தவிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார். அம்பிகாவின் கர்ப்பிணி வேஷத்தை உண்மை என்று நம்பி அவரிடமும் பின்னர் நாகேஷிடமும் பேசும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சகட்டம்.
அண்ணாமலை
ரஜினியின் பரிமாணத்தை கொஞ்சம் பெரிய அளவில் கொண்டுவந்த படம் என்றுதான் நினைக்கிறேன். சரத்பாபுவுடன் இணைந்து நடித்த மற்றுமொரு வெற்றிப் படம். ஏலத்தில் சொத்தை இழந்த சரத்பாபுவிடமே அந்த சொத்தைக் கொடுக்க சொல்லும் இடத்தில "கஷ்டப்பட்டவன் உயர்ந்த இடத்துக்குப் போகலாம், மேல இருக்கறவன் என்னிக்குமே கீழே விழக் கூடாது" என்று தத்துவம் பேசும் இடம் நம்மை நெகிழ வைக்கும்.
தம்பிக்கு எந்த ஊரு
ஒரு பணக்கார இளைஞன் சாதாரணமானவனாய் கிராமத்தில் வாழும் படம். செய்த வேலைக்குக் கூலியை கொடுக்கும் செந்தாமரை, "என்னப்பா, பணத்தையே பார்த்ததில்லையா?" என்று கேட்கும்போது, "இந்தப் பணத்தைப் பார்த்ததில்லை" என்று சொல்லும் இடம் அருமை. உழைப்பின் அருமை தெரிந்தவராக அவர் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரியும். இன்றும், பணத்தின் அருமை தெரியாத பல இளைஞர்களைப் பார்க்கும்போது, இந்தக் காட்சி என் மனதில் வந்து ஓடும்.
டிஸ்கி : இந்தத் தொடருக்கு யாரையாவது அழைக்கனுமே! ஓகே, வாங்க காயத்ரி தொடருங்க!