நான் கேட்டேன், "இது என்ன பேரு, அடியக்கமங்கலம்? இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க?" என்று.
அண்ணன் சொன்னார், "அது ஒன்னும் இல்லைடா, அந்தக் காலத்துல, ஒரு வெள்ளைக்கார துரை ரயில்ல தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினத்துக்கு போய்கிட்டு இருந்தாரு. அப்ப இந்த ஊர் வரும்போது, பக்கத்துல இருந்த ஒரு மாமிகிட்ட "இது என்ன ஊரு"ன்னு இங்கிலீஷ்ல கேக்க, அதுக்கு இங்கிலீஷ் புரியாத அந்த மாமி பக்கத்துல இருந்த இன்னொரு மாமிகிட்ட "அடி அக்கா மங்களம் இந்த ஆளு என்ன கேக்குறாரு?" என்று சொன்னாராம். உடனே, தொர, "ஐ ஸீ, அடி அக்க மங்கலம்? ஓகே, அடியக்கமங்கலம்" அப்படின்னு சொல்லிகிட்டே ஆபீசுக்குப் போய் ஊரு பேர மாத்திட்டாராம்" என்று வேடிக்கையாக சொன்னார்.
நான் விடவில்லை. "சரி, வீடுன்னு என் பேர் வந்தது, அதை சொல்லு" என்றேன். உடனே, அவர், அந்தக் காலத்தில ஒரு கட்டத்துல ஒவ்வொரு வீட்டுலயும் கணவன், மனைவி ரெண்டு பேர்தான் இருக்கலாம்னு ஒரு சட்டம் வந்தது. அப்ப, ஒரு இங்கிலிஷ்கார தொரை ஒரு வீட்டுக்கு வந்து அந்த வீட்டுக்காரரிடம் வாட் ஈஸ் திஸ்? னு வீட்டைக் காட்டிக் கேட்டாராம். "வீட்டில யார் யாரு இருக்கீங்கன்னு அவர் கேக்கராருன்னு நினைச்சுகிட்டு we two ன்னு சொன்னாராம். உடனே தொர , ஓ, வீ ....ட்டு?.........., எஸ்............., வீடு அப்படின்னு சொல்லிட்டாராம். அதுதான் வீடுன்னு பேர் வந்த காரணம் என்றார்.
நான் விடவில்லை, "அப்ப ஆஸ்பத்திரின்னு ஏன் பேர் வந்தது, சொல்லு" என்றேன். அவர் சொன்னார் :
வீடுன்னா ரெண்டு பேர்தான் இருக்கணும்னு சொன்னேன்ல. அந்த சமயத்துல, மனைவி கர்ப்பமாக இருக்கற காலத்துல மட்டும் அவங்களைப் பாத்துக்க ஒரு நர்சு இருக்கலாமாம். அப்படி நர்சும் இருக்கற கால கட்டத்துல, வீட்டுக்கு வந்த தொரை, "இதுக்குப் பேரு என்ன" என்று கேட்டாராம். அப்ப, கணவன், "ஹவுஸ், பட் த்ரீ" என்று சொன்னானாம். (வீடுதான் ஆனா மூணு பேரு இருக்கோம்). உடனே, வெள்ளைக்கார தொரை "ஒ, அவுஸ் பத் த்ரி, எஸ், ஆஸ்பத்திரி" ன்னு சொன்னாராம். அதுலேர்ந்து, பிரசவம் பாக்கற இடம்லாம் ஆஸ்பத்திரின்னு ஆயிடுச்சு. அப்புறம் எல்லா ஹாஸ்பிடலையும் ஆஸ்பத்திரின்னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க"
இப்ப உங்களுக்கு புரியுதா, எனக்கு மொக்கைக்கு ஐடியா யார்கிட்ட இருந்து கிடைக்குதுன்னு?