அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 28, 2009

வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்

ஒரு முன் டிஸ்கி: எல்லாரும் ஜோரா கை தட்டுங்க........இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு

இன்று (28.12.2009) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.


இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.



அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.

சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!
 
டிஸ்கி : ஹிந்து மத திருவிழாக்களுக்கு வாழ்த்துகள் யாரும் தெரிவிப்பதில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்ட maddy73 அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

Sunday, December 27, 2009

நிதரிசனம்

"ஏங்க்கா ....
மத்திய அமைச்சர்
மலேசியாவுல சொத்து வாங்கிட்டாராமே!"

"ஏங்க்கா .....
முதலமைச்சர்
முன்னூறு கோடி சேர்த்துட்டாராமே!"

"ஏங்க்கா ....
மத்திய  அமைச்சர்  தம்பிதான்
இப்ப இந்தியாவுலயே
ஏழாவது கோடீஸ்வரராமே !"

புலம்பினாள் பொன்னாத்தா.

"பாவி பயலுக,
நாம கஞ்சிக்கே
நாயா அலையுறோம்,
அவங்களுக்கு மட்டும்
அம்புட்டு சொத்து எங்கிருந்து வந்துச்சு......?"

"அடியே,
அடுத்தவங்களை சொல்லுறதை விட்டுட்டு
உன் அழுக்கைத் திரும்பிப் பாரு,
நீ ரொம்ப யோக்கியமா.....
தப்பே பண்ணலையா....?"
காரமாய் உறுமினான்
கணவன் கண்ணாயிரம்.

"நான் என்ன தப்பு செஞ்சேன்,
மிஞ்சிப் போனா,
போன எலக்சன்ல ஓட்டுப் போட
ஒரு ஆயிரம் ரூபா வாங்கினேன்,
அவ்வளவுதானே!"

கேட்டவுடன் சொன்னான் அவன்,
"அடியே, நீ வாங்கின ஒரு ஆயிரத்திலதாண்டி
அவங்க மொத்த சொத்தும் வாங்கினாங்க"


**********************************************************************
டிஸ்கி: இது கவிதையா என்று கேட்டால் பதில் இல்லை, ஆனால் இது நிச்சயம் கதை இல்லை