இது என் நூறாவது பதிவு. என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் பின்னூட்டாளர்களுக்கு என் நன்றிகள்! என் சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவாடிப்பூரத் திருவிழாவைப் பற்றியே இந்த பதிவு.
மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெருமாள் மூலவர் பெயர் பர வாசுதேவன், உற்சவர் பெயர் ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி. அது போல் தாயார் (அதாவது அம்பாள்) மூலவர் பெயர் செண்பக லட்சுமி, உற்சவர் பெயர் செங்கமலத் தாயார்.
| அருள்மிகு செங்கமலத் தாயார் |
| அருள்மிகு ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி |
வருடம் முழுவதும் திருவிழாக்களால் களை கட்டும் இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று அம்பாள் திருத்தேரில் வலம் வரும் காட்சி கண்கொள்ளாததாகும். தமிழகத்திலேயே, இரு வைணவத் திருத்தலங்களில் தான் அம்பாள் திருத்தேர் உலா வருவார். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில். மற்றொன்று, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில்.
ஆனால், ஒரு விசித்திரம் என்னவென்றால், மன்னார்குடியில் திருக்கோயிலில், கோயிலுக்கு உள்ளேயே இந்த திருத்தேர் பவனி வரும்.
ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்திற்கு எட்டு நாட்கள் முன்னால் கொடியேற்றம் நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் (ஏழாம் நாள் தவிர) காலையில் பல்லக்கிலும் இரவு விதவிதமான வாகனங்களிலும் அம்பாள் பவனி வருவாள்.
இரண்டாம் நாள் அன்ன வாகனத்திலும்,
மூன்றாம் நாள் சேஷ வாகனத்திலும்,
நான்காம் நாள் சிங்க வாகனத்திலும் (அது சமயம் பெருமாள் கருட வாகனத்திலும்)
ஐந்தாம் நாள் கமல வாகனத்திலும்
ஆறாம் நாள் யானை வாகனத்திலும்
ஏழாம் நாள் (இரவில் மட்டும்) பல்லக்கிலும்
எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும்
அம்பாள் வீதி உலா வருவார். இவை அனைத்தும் திருக்கோயில் உள்ளேயே அகன்ற சுற்றுப் பிரகாரத்தில் நடைபெறும்
ஒன்பதாம் நாள் அதாவது திருவாடிப் பூரத்தன்று திருத்தேரில் அம்பாள் உலா வருவார்.
பத்தாம் நாள் இரவு கொடியிறக்கம் நடைபெறும். அது சமயம் அம்பாள் பூப்பல்லக்கில் பவனி வருவார்.
நான்காம் நாள் அன்று தாயார் பெருமாள் காட்சி கொடுக்கும் இந்த வீடியோ என்னால் எடுக்கப் பட்டது, பார்த்து மகிழுங்கள்:
12.08.2010 (வியாழன்) அன்று திருவாடிப் பூரம். எல்லா நலமும் வளமும் பெற்று இவ்வுலக மக்கள் அனைவரும் வாழ எல்லாம் வல்ல அந்த திவ்ய தம்பதிகளை வேண்டிக் கொள்கிறேன்.


