அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 28, 2010

Happy Exams - Dear Parents!

நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள்.  அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகள், நல்லா கவனமா எழுதுங்க! May God Bless all!

நான் பிளஸ் டூ முடிச்சு ஒரு இருபத்து மூணு வருசமாச்சு.  என் அனுபவத்தை வச்சு மாணவர்களின் பெற்றோர்களுக்கு (ஆமாங்க, பெற்றோர்களுக்குத் தான்) சில யோசனைகள் (அறிவுரை கூறும் அளவுக்கு வயசு/அனுபவம் இல்லீங்கோ!)


  • எப்பவுமே அடுத்த வீட்டு மாணவனை வச்சு ஒப்பிட்டுப் பேசாதீங்க, "அவன் பாரு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான், நீயும் இருக்கியே" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அடுத்த வீட்டு மாணவன் மேல் கோபம் வருமே தவிர, உங்கள் பையன்/பெண் நீங்கள் விரும்புவதை செய்ய மாட்டார்கள்.
  • தேர்வுக்குப் போகும் முன் ஆதரவாய் சில வார்த்தைகள் கூறுங்கள் "ஒரு பதட்டமும் இல்லாம பரீட்சை எழுது, தெரிந்த பதிலை சீக்கிரம் எழுதிட்டு அப்புறம் மத்த கேள்விகளுக்கு பதில் எழுதப் பாரு" போன்ற வார்த்தைகள் அவனுக்கு தெம்பூட்டும்.
  • "இந்தப் பரிட்சையில் நீ எடுக்கிற மார்க்கை வச்சுதான் உன் எதிர்காலமே இருக்கு" என்று எப்போதும் சொல்லாதீர்கள்.
  • தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே கேள்வித்தாளை வைத்துக் கொண்டு அவன் எப்படி எழுதினான் என்பதை சரி பார்க்காதீர்கள்.  வீட்டுக்கு வந்தவுடன் முதலில் அவன் சாப்பிடட்டும், அதன் பிறகு "பரீட்சை எப்படிப்பா, பரவயில்லையா?" என்று பரிவுடன் கேளுங்கள்.
  • எக்காரணம் கொண்டும் இரவில் பத்து மணிக்கு மேல் படிக்க விடாதீர்கள். அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கு எழுப்பி படிக்க சொல்லுங்கள். 
  • பள்ளிக்கு புத்தகங்கள்/நோட்ஸ் எடுத்து செல்ல அனுமதிக்காதீர்கள், "ஒரு வருஷம் படிக்காததை ஒரு மணி நேரத்தில் படிக்கப் போவதில்லை, ஸோ, ரிலாக்ஸா இரு, ப்ரீயா ஸ்கூலுக்குப் போ" என்று சொல்லுங்கள்.
  • நீங்கள் அவனுடைய முன்னேற்றத்தில் கருத்தாய் இருக்கிறீர்களே தவிர, அவன் மேல் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்பதை உணர்த்துங்கள்.

இவ்வளவுதான், ரிசல்டின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பிறகு பார்ப்போம்.

So, All the Best, Parents!
  •   

வாழ்க்கை - ஞாபக மறதி

"இங்கேதான் எங்கேயோ வச்சேன், எங்க போச்சுன்னு தெரியலையே?"


"ரொம்ப நல்ல பேருங்க, சட்டுன்னு மறந்து போச்சு"


"பாழாப் போன ஞாபக மறதி என்னை எப்புடி ஆட்டுவிக்குது?"


என்றெல்லாம் புலம்பித் தவிக்கிறீர்களா? இதோ, உங்களுக்குத்தான் இந்தப் பதிவு:


மறதி ஒரு கொடுமையான வியாதி.  வள்ளுவன் கூறுகிறான்,


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்


(பொருள்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், தேவையற்ற தூக்கம் நான்கும் கெட்டுப் போகும் தன்மையுள்ளவர்கள் மிகவும் ஆசையோடு விரும்புகின்ற ஆபரணங்கள்)


ஆனால், மறதி ஒரு விதத்தில் நன்மையும் கூட.  ஆம், மறதி மட்டும் இல்லையென்றால், நம்முடைய பழைய சோகங்கள் நம்முடைய மனத்திலேயே தங்கி எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும்.  எனவே, ஞாபக சக்தியை நம்முடைய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகி விடுகிறது.


சரி சின்னச் சின்ன விஷயங்களை மறக்காமல் இருப்பது எப்படி?


உண்மையைச்  சொல்லுங்கள்  - தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட உங்கள் பெயரை மறக்காமல் சொல்லுவீர்கள் அல்லவா? உங்களுடைய   காதலிபெயரைக் கேட்டால் உடனே சொல்லுவீர்கள், அல்லவா? (மனைவி ஒருவரிடம் தவிர?!)


காரணம், நம்முடைய பெயர், நம் காதலி பெயர் போன்றவை நம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகின்றன.  அதை நினைக்கும்போதெல்லாம், நம் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.  யாரோ ஒருவர் நம் பெயர் கொண்டவர் ஒரு சாதனை செய்யும்போது, அந்தப் பெயரை ஊடகங்களில் பார்க்கும்போது எதோ நாமே அந்த சாதனையைச் செய்து விட்டதுபோல் ஒரு மகிழ்ச்சி.  காரணம், நாம் நம் பெயர் மேல் வைத்துள்ள பிரியம்.  நமக்குப் பிரியமான எதுவுமே நமக்கு மறப்பதில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தைச் சொல்லி ஒரு இடத்துக்கு வந்தால் லட்ச ரூபாய் கொடுப்பதாக யாராவது சொன்னால், அந்த இடம், நாள், நேரம் எப்போது நமக்கு மறக்காது அல்லவா? 

எனவே, செய்யும் செயலைப் பிரியத்துடன் செய்யும் போது, நாம் அதை மறப்பதில்லை.  அந்த செயலின் விளைவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தால், அதுவும் நினைவில் என்றும் நிற்கும்.


பொதுவாகவே, செய்யும் செயலை
  • அன்புடன் செய்யுங்கள் - நமக்காக நம்முடைய விருப்பத்துக்காக செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்தால் அது எப்போதும் மறக்காது. 
  • ஆர்வத்தோடு செய்யுங்கள் - செய்யும் செயல் நமக்கு நன்மையைத் தரப் போகிறது என்ற எண்ணமே ஆர்வத்தை அதிகரிக்கும்
  • இன்முகமாகச் செய்யுங்கள் - உங்கள் உள்ளத்தை மகிழச் செய்யும் காரியம் என்ற எண்ணத்தை வளர்த்தால் தன்னால் இன்முகத்தோடு செய்ய முடியும்.
  • உண்மையாகச் செய்யுங்கள் - ஏதோ கடமைக்கு செய்யாமல், உள்ளத்தை ஊன்றிச் செய்யுங்கள், அதுதான் முக்கியம்.
  • ஊக்கத்தோடு செய்யுங்கள் - இது நமக்கு பேரும் புகழும் பெற்றுத் தரும் செயல் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
  • எடுத்துச் செய்யுங்கள் - இது நம்முடைய கடமை, பிறர் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை, நாமே செய்ய வேண்டும் என்று உரிமையோடு செய்யுங்கள்.


பொதுவாக, மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், நகராட்சிக் கட்டணம், எரிவாயு சிலிண்டர் போன்றவற்றுக்குத் தான் ஞாபகம் இருப்பதில்லை. அதற்கு, அலைபேசி இருப்பதால், அதில் நினைவூட்டல் வசதி இருக்கிறது - அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  (ஆனால், ஞாபகமாக அவ்வப்போது செல் பாட்டரி சார்ஜ் செய்ய வேண்டும்).



காலப் போக்கில் செல் நினைவூட்டல் இல்லாமலேயே இவை ஞாபகத்தில் இருக்கும்.

இன்னொரு விதத்தில் நம் நினைவில் இருக்கவேண்டியதை நாள்காட்டியிலோ, மாத காலண்டரிலோ எழுதி வைக்கலாம். (ஆனால் மறக்காமல் தேதி கிழிக்கவேண்டும்).  

எனவே, ஞாபக சக்தியை வளர்ப்போம், மறதியை வசதியாய் பயன்படுத்துவோம், வாழ்வில் உயர்வோம்!

டிஸ்கி 1 : என்னுடைய இரு பதிவுகளுக்கான கால இடைவெளிக்கும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.

டிஸ்கி 2 : பதிவைப் படிச்சதுக்கு நன்றி. மறக்காம, பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க, ரொம்ப ரொம்ப நன்றி! 

Sunday, February 14, 2010

காதலர் தின சிறப்பு சிறுகதை:

அனைத்துப் பதிவர்களும் காதலர் தினச் சிறப்பு செய்திகளை வெளியிடும்போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? இதோ, ஒரு சிறுகதை:
(வழக்கம்போல் நீதியும் உண்டு - படித்து மெய் சிலிர்த்து விடுவீர்கள்)



ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான் (பெயர் எதற்கு, வேண்டாம் விடுங்கள்). அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான் (அவள் பெயரும் வேண்டியதில்லை).  இரு வீட்டிலும் எதிர்ப்பு வலுத்ததால் இருவரும் ஊரைவிட்டே ஓடினார்கள்.  

சிறிது நாட்கள் பொறுத்துப் பார்த்த பெண்ணின் தந்தை, மனம் தாங்காமல் செய்தித் தாளில் ஒரு விளம்பரம் செய்தார், இப்படி:
"மகளே, நீ பிரிந்த துக்கம் தாங்காமல் நம் வீட்டு நாய் கூட சாப்பிட மறுக்கிறது, எங்கிருந்தாலும் வந்து விடவும், நீ விரும்பும் பையனையே நான் மணம் செய்து வைக்கிறேன்"

விளம்பரத்தைப் படித்த நாயகியும் நாயகனும் ஊருக்குத் திரும்பி வந்தார்கள். சொன்னபடியே இரு வீட்டாரும் கூடிப் பேசி திருமணத்தை நிச்சயித்தார்கள்.  

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, இருவரும் துணி வாங்க ஜவுளிக் கடைக்குச் சென்றார்கள். சென்று திரும்பும் வழியில் மணமகன் சாலையை கடக்கும்போது ஒரு காரில் அடிபட்டு மணமகளின் கண் எதிரிலேயே இறந்து போகிறான்.  இறக்கும்போது, ஆசைக் காதலியின் மடியில் உயிர் போகிறது, மணமகளின் உடை எங்கும் ரத்தக் கறை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பெண்ணின் தாயின் கனவில் ஒரு தேவதை தோன்றி "உன் பெண் அன்று உடுத்தியிருந்த ஆடையில் ரத்தக் கறை படிந்திருக்கிறது, உடனடியாக அதை நீக்கச் செய்" என்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை அந்தத் தாய் உதாசீனப் படுத்திவிட்டாள்.

மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தந்தையின் கனவில் தோன்றிய அந்தத் தேவதை மீண்டும் அதுபோல் எச்சரித்தது, இப்போது தந்தையும் இதை உதாசீனப்படுத்திவிட்டார்.

ஒரு வாரம் கழித்து, அந்தப் பெண்ணின் கனவிலேயே தோன்றிய தேவதை மறுபடியும் எச்சரித்தது.  திடுக்கிட்டு எழுந்த அந்தப் பெண் கனவைப் பற்றி தன் பெற்றோரிடம் கூற, மறு நாளே கடைக்குப் போன தந்தை ஒரு வாஷிங் சோப் வாங்கி வந்தார். மகளும் துணியில் உள்ள கறையைப் போக்க எண்ணி அந்தத் துணியைத் துவைத்தாள். இருப்பினும், ஓரளவே அந்த ரத்தக் கறையைப் போக்க முடிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அந்தத் தேவதை மீண்டும் கனவில் தோன்றி "ரத்தக் கறை முழுதுமாக போகாவிட்டால் பின்விளைவுகள் மோசமாகும்" என்று எச்சரித்தது. அவளும், அடுத்த நாள் வேறொரு உயர்ந்த வாஷிங் சோப்பை வாங்கி துணியைத் துவைத்தாள். இருப்பினும், கறை நீங்கிய பாடில்லை. 


அன்று இரவே, அவள் கனவில் தோன்றிய தேவதை ஒரு உபதேசம் செய்தது, அது.......


சில பொது அறிவு கேள்வி பதில்கள்:

----------------------------------------------------------------------------------
உங்களுடைய  பொது அறிவினைச் சோதிக்கவே, இந்தப் பதிவு(?!)

1. சிவப்பு, வெள்ளை விளக்குகளின் பயன் என்ன?

2. (a+b)2=a2+2ab+b2    என்ற கணித விதி எதற்கு பயன்படுகிறது?

3. அவல், பொரிக்கடைகளின் பயன் என்ன?

4. புடலங்காயினால் ஒருவருடைய உயிரை காப்பாற்ற முடியும், எப்படி?

5. ஒருவனுடைய தங்கைக்கு கடுமையான ஜுரம், அப்போது அவனுடைய காதலி என்ன செய்தால் அவனுடைய அன்பைப் பெறலாம்?

பதில்கள் கீழே:

Friday, February 12, 2010

வாழ்க்கை - பணிவு

------------------------------------------------------------------------------

"உலகத்தில உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே! 
உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!"

இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம்.  எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது  என்  எண்ணம்.

"நேத்து எங்க ஆபீசர் என்னைக் கண்டபடி திட்டினாரு, ஆனாலும் நான் பொறுமையா இருந்துட்டேன்"என்று கூறுவது பெருமை இல்லை.  ஏனென்றால் உயர் அதிகாரியிடம் பணிவாக இருப்பது அதிசயம் இல்லை.  ஆனால், "பியூனுக்கு ஏதோ மனக் குழப்பம் போலிருக்கு, அதான், எப்பவும் சரியா செய்யறவன், நான் சொன்னது எதையும் நேத்து சரியா செய்யலை. சரி போறான்னு விட்டுட்டேன்" என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் இளகிய மனம் எதிராளிக்குப் புரியும்.

சின்ன வயதில் அதிகமாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை, நான் வளர்ந்த சூழல் அப்படி.  ஆனால், கேபிள் டிவி வந்தபிறகு, கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தாலும், சினிமா மோகம் என்றுமே எனக்கு இல்லை.  அதனால், இவரின் ரசிகன், அவர் சூப்பர் என்றெல்லாம் ஒரு நடிகர்/நடிகையை ஆராதிக்கும் நபரும் நான் இல்லை.  ஆனால், தமிழ்ப் படவுலகில் நான் விரும்பும் இரண்டு மனிதர்கள் (கவனிக்கவும்: நடிகர் இல்லை, மனிதர்) திரு ரஜினிகாந்த் (யாருப்பா அங்க விசில் அடிக்கறது, கோபி சாரா, வணக்கம் தல) மற்றும் திரு ஏவிஎம் சரவணன். காரணம், இவர்கள் இருவரிடமும் நான் காணும் பணிவுதான்.  தமிழ்நாடே அவர் பின்னால் இருக்கும் (அல்லது இருப்பது போல் தோன்றும்) சூழலில் கூட தனிக் கட்சி என்று ஆரம்பிக்காமல் (அல்லது ஆரம்பித்துக் காணாமல் போகாமல்) அமைதியாக இருந்தாரே, சர்வ நிச்சயமாகச் சொல்லுகிறேன், மனத்தில் பணிவு என்ற ஒன்று இல்லாத எந்த நபரும் அந்த நேரத்தில் அந்த ஒரு முடிவு எடுத்திருக்க முடியாது.  

அதேபோல், திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்களை எந்தப் பொது இடத்தில் பார்த்தாலும் இரு கைகளை கட்டிய வண்ணமே இருப்பார்.  எத்தகைய ஜாம்பவான்களை வைத்து எவ்வளவு மெகா ஹிட் படங்களை கொடுத்த எத்தனை பெரிய ஒரு பட நிறுவனம், அந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் இவ்வளவு அமைதியாக பணிவாக தோன்றுகிறார் என்றால், அந்த பணிவுக்கு என்னுடைய பெரிய சல்யூட்.

இதைத்தான் தெய்வப் புலவர் 
                                        பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
                                        சுருக்கத்து வேண்டும் உயர்வு 

என்கிறார் (திருக்குறள் - 963)

"பணிவாக இருந்தால் நம்மைக் கோழை என்று நினைக்க மாட்டார்களா?" என்று கேட்க தோன்றலாம்.  முதலில் அப்படி நினைத்தாலும், காலப் போக்கில் நம்முடைய பணிவைக் கண்டு வியந்து அவர்கள் மனம் மாறிவிடுவார்கள்.  

குலைதள்ளிய வாழை சற்று வளைந்துதான் இருக்கும், அதுதான் பிறருக்குப் பயன் கொடுக்கும். எனவே, பணிவாய் இருப்போம், பிறருக்குப் பயன் கொடுப்போம்.

Thursday, February 11, 2010

ஒரு இனிய நிகழ்வு குறித்து அறிவிப்பு

என்னுடைய பத்தாம் வகுப்பு நண்பனை வலைப்பூவின் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.  அதற்கு முன்னும் பின்னும் மேலும் பல இளமைக் கால நண்பர்களின் தொடர்பு கிடைத்திருக்கிறது.  இதுவரை கிட்டத்தட்ட முப்பது நண்பர்களின் தொடர்பு கிட்டியிருக்கிறது.

இந்தத் தொடர்பை எப்படி உபயோகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது, ஒரு யோசனை தோன்றியது. நாங்கள் SSLC முடித்தது 1985 ல் என்பதால் அதன் வெள்ளிவிழாவை இந்த ஆண்டு கொண்டாடலாமே என்று நான் விரும்பினேன்.  அதன்படி நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது அனைவருமே அந்த ஐடியாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.

எனவே, வரும் மே மாதம் இரண்டாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாங்கள் படித்த பள்ளியில் நாங்கள் அனைவரும் கூடி வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.  எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களையும் விழாவுக்கு அழைத்து மரியாதை செய்ய உள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறேன்.

டிஸ்கி: மன்னார்குடி தேசிய மேனிலைப் பள்ளியில் படித்து 1985 ல் SSLC  முடித்த எவரும் என்னைத் தொடர்பு கொண்டு இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்

Sunday, February 7, 2010

போலியோ சொட்டு மருந்து - இன்று

மறந்துடாதீங்க. இன்று, (அதாவது 07.02.2010)  ஐந்து வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கோ, பேருந்து நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து நம் நாட்டு எதிர்காலத் தூண்களை வலிமையானவர்களாக ஆக்க உதவி செய்யுங்கள்.