அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, May 28, 2011

ஆசிரியரின் விஞ்ஞான அறிவு!


Wacky Science Teacher Doing a Lab Experiment

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஒருவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது நடந்தது இது.
 
அன்று பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது.  . தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த அந்த அறையின்  கண்காணிப்பாளர் அறை முழுவதும் நடந்து வந்தபோது சட்டென்று ஒரு மாணவனை எழுப்பினார். 

"ஏன்டா, முன்னாடி இருக்கற பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கிறே?" என்று கேட்டார்.

அந்த மாணவன் விழித்தான், "இல்ல, சார், நான் காப்பி அடிக்கவே இல்லை" என்று சொன்னான், ஆனால் கண்காணிப்பாளர் அதை நம்பத் தயாராக இல்லை. அவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர் பிடிவாதமாக இருந்தார். 

அந்த நேரத்தில் பறக்கும் படை அங்கே வந்தது. அந்தப் படையில் இருந்த ஒருவரிடம்  இந்த மாணவனைக் காண்பித்து, "சார், இவன் முன்னாடி இருக்கற பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கிறான்" என்றார்.

அவர் உடனே அந்த மாணவனின் விடைத்தாளைப் பார்த்தார்.

"என்ன சார் சொல்றீங்க? இவனோட பேப்பர்ல எதுவுமே எழுதலையே?" என்று கேட்டார் வந்தவர்.

கண்காணிப்பாளர் பளிச்சென்று சொன்னார், "அதேதான் சார். அங்க பாருங்க முன்னாடி இருக்கற பையனோட பேப்பரிலேயும் எதுவும் எழுதலை, அப்ப அவனைப் பார்த்து இவன் காப்பி அடிசிருக்கான்னுதானே அர்த்தம், எப்படி கண்டுபிடிச்சேன், பார்த்தீங்களா?" என்றார் பெருமையாக. 

டிஸ்கி: இந்த அறிவாளியான ஆசிரியர், வெங்கட்டா, போலீசா, டெரரா என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்! 

Monday, May 23, 2011

வாரச் சந்தை - 23.05.2011

தத்துவம்

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!

பொன்மொழி 

பணம் இல்லாதபோது நீ மற்றவர்களைத் தெரிந்து கொள்ளலாம், பணம் இருக்கும்போது மற்றவர்கள் உன்னைத் தெரிந்து கொள்வார்கள்!

ஜோக் 

ஒரு பெண்மணி டாக்டரிடம்: "என் கணவர் தூக்கத்தில பேசறாரு"
டாக்டர்:"சரி விடுங்க, நிஜத்தில நடக்காதது கனவில மட்டுமாவது நடக்கட்டுமே"

குவிஸ்  
புல்லுக்கும் தர்ப்பைப் புல்லுக்கும் என்ன வித்தியாசம்?

புல் வழவழப்பா இருக்கும், குத்தாது. தர்ப்பைப் புல் சொரசொரப்பா இருக்கும், ரொம்ப சீண்டினா குத்திடும்.
(இதுக்கு யாராவது அரசியல் சாயம் பூசினா நான் பொறுப்பாக மாட்டேன்)

கவிதை 
பெரிதாய் எழுத 
ஒன்றுமில்லை
எனவே ஒரு 
குட்டிக் கவிதை 
மட்டும் இதோ
"கவிதை" 

(நான்தான் சொன்னேனே, "குட்டிக்" கவிதை என்று? ஹிஹி)

Saturday, May 14, 2011

புதிய அரசுக்கு வாழ்த்துகள்!



ஒரு மாத சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் தங்கள் வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு அமோகமாக வழங்கியுள்ளார்கள். கருத்துக் கணிப்புக்களை திணிப்புக்களை எல்லாம் தூள் தூளாக்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெருவாரியான இடங்களைப் பெற்று முதல்வர் ஆகியிருக்கிற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்.
திமுக தோற்க வேண்டும் என்பதே பெரும்பாலான பதிவர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. நான் கூட நினைத்தேன், "பதிவர்களில் பலர் வாக்களிக்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள், உண்மையில் வாக்களிக்கக் கூடியவர்கள் என்ன நினைக்கிறார்களோ, யார் கண்டது?" என்று. ஆனால் மக்களின் எண்ண அலைகளும் இந்தத் திசையில் தான் இருக்கிறது என்பது இன்று புரிந்தது.

புதிய முதல்வருக்கு ஒரு வார்த்தை: இப்படிதான் 1991-ல் மக்கள் உங்களுக்கு அதிக இடங்கள் அளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், உங்கள் தவறான போக்கினால் அவர்களை காயப்படுதினீர்கள். அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். உங்கள் முன் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. சரிந்துள்ள தமிழக நிதி நிலையை மீட்க வேண்டும். சட்ட ஒழுங்கு, மின்சாரம் போன்றவற்றில் பின் தங்கியுள்ள மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். பழைய அரசு செய்துள்ள தவறுகளின் மேல் நடவடிக்கை என்ற பெயரில் வழக்குகள் போடுவதை விட்டுவிட்டு ஆக்க பூர்வ நடவடிக்கை வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

விஜயகாந்துக்கு : சட்டசபை புதிய எதிர்க் கட்சித் தலைவரை காண்கிறது.  கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள் எம்.எல்.ஏ ஆகி சாதனை செய்த நீங்கள், அடுத்த சில ஆண்டுகளுக்குள் எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்து பெறுகிறீர்கள்  என்றால், மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது.  தேர்தல் சமயத்தில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை மறந்து ஆக்க பூர்வமான எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் உங்கள் நடவடிக்கையை எதிர்பார்கிறோம்.

திமுகதலைவருக்கு: திருமங்கலம் பார்முலா எப்பொழுதுமே கை கொடுக்காது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் இலவசங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால், நாட்டையே வளைத்துப் போட்டுவிட்டு எந்தத் துறையிலும் உங்கள் குடும்ப நபர்களே ஆட்சி செய்யும் அவல நிலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  

ஊடகங்களுக்கு: இனியாவது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளை நிறுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தில் நான்காவது எஸ்டேட் என்ற பெருமை பெற்ற நீங்கள் மக்களின் உண்மையான மன ஓட்டத்தை அறிய முற்படுங்கள். நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை உண்மையாக எடுத்துரைக்கும் வழியைக் காணுங்கள். 

பொது மக்களுக்கு: இன்னும் அதிக அளவில் ஒட்டு சதவீதம் வருமாறு எல்லோரும் அனைவரும் அவசியம் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

தேர்தல் கமிஷனுக்கு: ஒரு அற்புதமான நிகழ்வை நிகழ்திவிட்டீர்கள். வாழ்த்துகள்!.

Wednesday, May 11, 2011

தமிழகத் தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்?



தமிழகத்தில் தேர்தல் நடந்ததும் அதில் சென்று நான் வோட்டுப் போட்டதும்  மறந்தே போய்விட்டது சில ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப் பட்டதும்தான் ஞாபகம் வந்தது.
சரி, இவர் ஜெயிப்பார் என்று சிலரும் அவர்தான் ஜெயிப்பார் என்று பலரும் சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை கருத்துக் கணிப்புகளை நான் என்றுமே மதித்து கிடையாது. (என்னை யாரும் மதித்ததே கிடையாது என்பதும் உண்மைதான்) 

போகட்டும். பொதுவாகவே மக்களின் மனநிலை என்பதே சில விஷயங்களில் முன்கூட்டித் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருப்பதுதான்.  என்னதான் பின்னாளில் தெரிய வரும் என்றாலும், முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் ஒரு கிக் இருக்கிறது.  இதை ஊடகங்கள் வியாபாரமாக்குகின்றன; அதைக் குறை சொல்ல முடியாது.

நான் என் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பேசியதில் ஒரு விஷயம் தெரிந்தது. அதன் மூலம் இந்தத் தேர்தலில் தமிழக முதல்வராக யார் வரக் கூடும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.அதை உங்களிடமும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான மக்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது நான் கீழ்க் கண்ட முடிவுக்கு வந்தேன்.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் 118. அப்படி பார்க்கும்போது இந்த அளவுக்கு இடங்கள் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.

- தொடரும்.

டிஸ்கி: என்னடா, பதிவை முடிக்க வில்லையே என்று வருந்த வேண்டாம். தமிழகத் தேர்தலில் யார் ஆட்சி அமையப் போகிறது என்பதை அடுத்தப் பதிவில் கூறிவிடுகிறேன்.......................இரண்டே நாட்களில்.......ஹிஹி!