அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் போட்டியில் என்னுடைய படைப்புகளும்

பதிவுலகிற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் நான் அப்படி ஒன்றும் பெரிதாக எழுதிக் கிழித்து விடவில்லை என்று எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

இருந்தாலும், தமிழ்மணம் சிறப்பு படைப்புகளுக்கான போட்டி-2010 ல் நானும் என்னுடைய் மூன்று படைப்புகளை நாமினேட் செய்தேன். அதில் இரண்டு படைப்புகள் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறேன்.

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மிகம் பகுதியில்


என்னுடைய பேசுவது எப்படி-2

மற்றும் நகைச்சுவை பகுதியில்

பதிவர் ஜோக்ஸ்

இரண்டும் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது
 
இந்த இரண்டு பதிவுகளும், இரண்டாவது சுற்றிலும் தேர்வு பெறத் தகுதி இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
 
டிஸ்கி : இந்த சாக்கில் மேலும் ஒரு பதிவிற்கு உதவிய தமிழ்மணம் அமைப்பாளர்களுக்கு என் நன்றி!

ட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா?

உங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி மாட்டிக்காம தப்பிக்கறதுக்குதான் இந்தப் பதிவு.  


அதுதான் எங்களுக்குத் தெரியுமே, ஒரு அம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினா தப்பிசுடலாமே!"ன்னு நீங்க சொல்றது கேக்குது. ஆனா ஒவ்வொரு தடவையும் அம்பது நூறுக்கு நீங்க எங்க போவீங்க? அதுதான், இப்ப ஒரு ஐடியா சொல்றேன்.
முதல்ல நீங்க என்ன பண்ணனும்னா, கையில எந்த பேப்பரும் இல்லாம போலீஸ் இருக்கற ஏரியாவா பாத்து வண்டிய ஒட்டிக்கிட்டு போங்க. போலீஸ் உங்களை நிறுத்தலாம், நிறுத்தாம கூட போகலாம். 

ஒரு வேளை, உங்களைக் கைகாட்டி நிறுத்தலேன்னா கூட, நீங்க கொஞ்சம் ஓவர் ஸ்பீடா போங்க அப்பத்தான் அவங்களே உங்களை கூப்பிட்டு வண்டில இருக்கற சாவிய எடுத்து வச்சிக்கிட்டு உங்களை கேள்வி கேப்பாங்க.

இப்பதான் நீங்க முக்கியமான கட்டத்துல இருக்கீங்க. உங்க கிட்ட லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இதுலாம் இல்லாம இருந்தா, தைரியமா அந்த போலீசை முறைங்க. அவ்ளோதான், ஒண்ணு உங்களை உடனே நடமாடும் நீதிமன்றத்துக்குக் கூட்டிகிட்டு போய் பைன் போடுவாங்க, இல்லன்னா, உங்க வண்டிய பிடுங்கி வச்சுக்கிட்டு கோர்ட்ல வந்து வாங்கிக்க சொல்வாங்க. 

இப்படி ஒரு தடவை நடந்துட்டா, நீங்க ஜன்மத்துக்கும், தேவையான டாக்குமெண்ட்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகவே மாட்டீங்க. இப்படி செஞ்சா, எந்த காலத்திலேயும் டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்க மாட்டீங்க, ஓகேவா?

டிஸ்கி : என்ன முறைக்கறீங்க? இந்த லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இதெல்லாம் நம்ம வண்டிக்கு அவசியம் வேணும்! ஒரு வேளை, விபத்தோ அல்லது வண்டி காணாம போனாலோ, இந்த டாக்குமெண்ட்ஸ் வச்சிதான் நாம இழப்பீடு வாங்க முடியும். நம்ம வசதிக்காக இதெல்லாம் வேணும்னு கவர்மெண்டு சொல்லுது. அதுனால, அம்பதோ நூறோ இருந்தா போதும், இன்ஷூரன்ஸ் இத்தியாதி பேப்பரே வேணாம்னு இருந்தீங்கன்னா, உங்களுக்குத் தான் இழப்பு, புரியுதா?

Saturday, December 25, 2010

வாரச் சந்தை - 3


உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு என் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்! 




ஒரு கவிதை
என்னை விட்டு பிரித்துவிடாதே
என்று இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தேன்
வாசலில் புது செருப்பு!

ஒரு பொன்மொழி

ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கணும்னா, சொல்றவங்க வார்த்தை சுத்தமா இருக்கணும், கேக்கறவங்க எண்ணமும் தெளிவா இருக்கனும்.

ஒரு ஜோக்

ஒருவர் : அவன் என்னைப் பார்த்து அரை லூசுன்னு திட்டிட்டான் சார்!"
மற்றவர்: விடுங்க, அவனுக்கு எதுவுமே அரைகுறையாய்த்   தான் தெரியும்"

ஒரு (management) தத்துவம்

இந்தக் காக்கா மட்டும் மரத்து மேல ஜாலியா உக்காந்திருக்கேன்னு ஒரு முயல் தானும் அந்த மரத்துக்கு கீழ ஜாலியா உக்காந்துச்சாம். ஒரு ஓநாய் வந்து முயலை அடிச்சு சாப்ட்டுச்சாம். நீதி: ஒண்ணும் பண்ணாம ஜாலியா இருக்கணும்னா, எப்பவுமே டாப் லெவல்ல இருக்கணும்.


ஒரு குவிஸ்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவற்றைத் தவிர ஒரு மூன்று நாட்கள் உங்களால் சொல்ல முடியுமா? (யாரும் விடை சொல்லவில்லை என்றால், நான் சொல்லுகிறேன்)

Wednesday, December 22, 2010

கொஞ்சமாவது அறிவிருக்கா?

"எத்தனை தடவைதான் சொல்றது. இந்த சின்ன கணக்கைக் கூட ஒழுங்கா போட முடியலை; என்னதான் படிச்சீங்களோ?
சரி, மாத்ஸ் தான் வரலை, English என்ன ஆச்சு? சாதாரண கிராமர், மூணு
டென்ஸ்லேயும் இந்த செண்டன்சை எழுதணும், அது முடியாதா?
அதெல்லாம் கூட பரவாயில்லை, தமிழ் நம்ம தாய்மொழி. அதுல கூடவா எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்?
இதிலேயே இப்படின்னா, ஹிஸ்டரி, சயின்ஸ், சோசியல் சயின்ஸ் இதெல்லாம் பத்திக் கேக்கவே வேணாம்.
இப்பவே சொல்லிடறேன், இந்த மாதிரி தப்பு தப்பாதான் ஹோம் வொர்க் எழுதுவன்னா நாளையிலிருந்து நானே என் ஹோம் வொர்க்கை எழுதிக்கறேன். உன்னால என் மிஸ்கிட்ட நான் திட்டு வாங்க வேண்டியிருக்கு"
....
...
...
...
...
..
...
என்று என்னைத் திட்டியது சாட்சாத் அஞ்சாம் வகுப்பு படிக்கும் என் மகள்தான்.

டிஸ்கி : படத்தில் இருப்பது என் பெண்ணின் மிஸ்.  ஹிஹி!

Sunday, December 19, 2010

ஒரு புதிய வலைப்பூ அறிமுகம்

எல்லாருக்கும் வணக்கம்!
 
பொதுவாவே தேர்வுன்னா எல்லாருக்கும் ஒரு பயம். அதுலேயும் கணக்கு பாடம்னா நிறைய பேருக்கு அலர்ஜி. அதைப் போக்குவதற்காக ஒரு  ப்ளாக் துவங்கப் பட்டிருக்கிறது.

உங்களுக்கு கணக்கு சம்பந்தமா எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு ஈமெயில் செய்யுங்க.
desikadasan@gmail.com
எனக்கு தெரிஞ்ச வரையில் அந்த சந்தேகத்தை clear பண்றேன்.

கேள்விகளை அந்த ப்ளாகின் பின்னூட்டத்திலும் கேட்கலாம்.

வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்.

Saturday, December 18, 2010

வாரச் சந்தை - 2

ஒரு ஜோக்:
மிஸ்டர் எக்ஸ் ஒரு சமயம் நண்பரோட ஏ.டி.எம்.முக்கு போனார். அவர் நம்பர் அழுத்தும்போது பாத்துகிட்டிருந்த நண்பர் சொன்னார், "உன்னோட பாஸ்வோர்ட் தெரிஞ்சுடுச்சு.........xxxx தான?"

எக்ஸ் சொன்னார், "ஏமாந்தியா, இல்லையே, 5698 ஆச்சே!"

ஒரு தத்துவம்
காதலில் ஒரு விசித்திரம்
தோத்தா பாய்சன்
ஜெயிச்சா ஸ்லோ பாய்சன்

ஒரு கவிதை

உன்னைக் கண்டேன்,
என்னை மறந்தேன்!
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னையே மறந்தேன்!

ஒரு (மொக்கை) கேள்வி:
கண்டக்டர் "ரைட்"னு சொன்னா, பஸ் ஓடுது! அப்போ பஸ்ஸ நிறுத்த, "லெப்ட்"னு சொல்லனுமா, இல்ல, "தப்பு"னு சொல்லனுமா?

ஒரு பொன்மொழி


"எது இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது. நீ எதை இழந்தாயோ, அது இங்கேயே கொடுக்கப் பட்டது" அப்படின்னு சொல்றது.........................................................................................................................பிக்பாக்கெட் பக்கிரி தான்.

ஒரு குவிஸ் 

வெற்றி விழா ரஜனி நடிச்ச படம் - சரியா?

சரிதான்.  நடிகை சசிகலாவுக்கு தெலுங்குப் படவுலகில ரஜனின்னு தான் பேரு.

Friday, December 17, 2010

வைகுண்ட ஏகாதசி

இன்று (17.12.2010) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.

இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.



அருள்மிகு அரங்கநாதர்,
பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கத்தில் 
அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.
சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது இருபது நாட்கள் கொண்டாடப் படுவது. முதல் பத்து நாட்கள் "பகல் பத்து" என்றும் இரண்டாம் பத்து நாட்கள் "ராப்பத்து" என்றும் சொல்வார்கள். பகல் பத்து என்கிற முதல் பத்து நாட்களில் பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்,  திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் பிரபந்தங்களும் "ராப்பத்து" என்கிற இரண்டாம் பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பிரபந்தமும் கோயில்களில் ஓதப்படும்.

இந்த இராண்டாம் பத்தின் முதல் நாளே "வைகுண்ட ஏகாதசி" என்று கொண்டாடப் படுகிறது. (இன்னும் நிறைய சொல்லலாம், இருந்தாலும் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்)

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

அதே சமயம், இந்தப் பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் வறுமை விட்டு வளமை பெற்று பெருமையோடு வாழ அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரியவேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!

டிஸ்கி : போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)


Monday, December 13, 2010

மொக்கையைப் பற்றியும் பற்றாமலும்

டிஸ்கி: இது இவருடைய இந்த பதிவுக்கான எதிர் பதிவு அல்ல.



ஒவ்வொரு முறையும்
பதிவு எழுதி
தோற்கும்போதும் 
இதுவே என் 
கடைசி மொக்கையாய்
இருக்கவேண்டுமென்று
பிரார்த்திக்கிறேன்.
காலக் கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்கின்றன.


$$$$$$$$$$$$$$$$$$$$




மொக்கை

நான்
நான்
மொக்கை
எப்படி பார்த்தாலும்
பதிவுக்கு இரண்டுமே
தேவை ஆகிறது.

@@@@@@@@@@@@@@


நேற்று ஒரு பதிவில்
இதைத் தான் 
எழுதிக் கொண்டிருந்தேன்
இன்று இந்தப் பதிவில்,
நாளை வேறு ஒரு பதிவில்
எழுதிக் கொண்டிருக்க கூடும்.
பதிவு தான் மாறுகிறதே தவிர
என் மொக்கை மாறுவதே இல்லை.





Sunday, December 12, 2010

என்னைக் கவர்ந்த கமல் படங்கள்!

முதல்ல இன்னிக்கு பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 
 வாழ்த்துகள்!
ஏற்கெனவே ரஜினியின் படங்களில் எனக்குப் பிடித்த சிலவற்றை கூறியிருந்தேன். அப்ப கமல் படங்களைப் பத்தி எதுவும் சொல்லலையா என்று என் நண்பர் கேட்டார். அவருக்காக இதோ எனக்கு பிடித்த கமல் படங்கள்:



ஹிஹி கமல்னா ஹிந்தில தாமரைன்னு அர்த்தம்.

டிஸ்கி: பிம்பிளிக்கி பிளாக்கி 

Saturday, December 11, 2010

வாரச் சந்தை

சந்தைனா, எல்லாம்தான் இருக்கும், உங்களுக்கு பிடிச்சதை படிச்சுட்டுப் போங்க.

ஒரு (ஆணாதிக்க) தத்துவம்:-
ஒரு லேடி ஆபீசர் என்னதான் ஹை லெவல்ல  இருந்தாலும், அவங்களை மேலதிகாரின்னு தான் சொல்வோமே தவிர female அதிகாரின்னு சொல்றதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொன்மொழி:-
"வாழ்க்கையில change தானா வரும்னு எதிர் பாக்கக் கூடாது; நீதான் கொண்டு வரணும்" என்று சொன்னது ....................................................................
.............................................ங்கொய்யால, எல்லா பஸ் கண்டக்டரும்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குவிஸ்:-
அண்ணாமலையும் ரஜினி படம்தான், அருணாச்சலமும் ரஜினி படம்தான். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அண்ணாமலைல ரஜினி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவாரு (வெற்றி நிச்சயம்.....)
அருணாச்சலதுல ஒரே பாட்டுல எல்லா பணத்தையும் செலவு செஞ்சிடுவாரு (சிங்கம் ஒன்று புறப்பட்டதே...........)
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:-
நான் சொல்றது எல்லாமே பொய்தான்னு ஒருத்தர் சொன்னா அவர் சொல்றது உண்மையா, பொய்யா?
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஜோக்:-
ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கவிதை(?!):-
கத்தி இல்லை,
கம்பும் இல்லை,
அடிக்க வில்லை,
ரத்தம் மட்டும் வருகிறது,
கோமாளி பேசுகிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும் சந்தைக்குப் போகலாமா? 

Monday, December 6, 2010

என்னைக் கவர்ந்த ரஜினி படங்கள்

சௌந்தர் அவருடைய இந்தப் பதிவில்   என்னை இந்தத் தொடருக்கு அழைத்திருந்தார். ஒரு நடிகன் என்பதைவிட ஒரு மனிதன் என்ற முறையில் என்னை மிகவும் கவர்ந்த ரஜினியின் படங்களில் நான் சிறந்ததாய் கருதும் பத்து படங்கள் இதோ(வரிசை எல்லாம் கிடையாது, எல்லாமே என் மனத்தைக் கவர்ந்தவைதான்):-
முரட்டுக் காளை

முரட்டுக் காளை
ஒரு சாதாரண கிராமத்தானாக தம்பிகள் மீது பாசம் காட்டும் அதே நேரம் நீதிக்கு போராடும் ஒரு மனிதன். இந்தப் படத்தின் மீதான ஈர்ப்பு அதிமானதுக்குக் காரணம் பின்னாளில் கல்கி இதழில் ஏ.வி.எம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டிதான். அதில் சொல்லியிருந்தார்:


இந்தப் படத்திற்காக ரஜினியை அணுகியபோது வில்லனாக யார் நடிக்கிறார் என்று கேட்டார். ஜெய்சங்கர் என்று சொன்னேன். "அவர் பெரிய நடிகர் ஆயிற்றே. பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். அதனால், இந்தப்பட விளம்பரங்களில் எனக்கு இணையாக அவரையும் வெளிப்படுத்தவேண்டும். போஸ்டர்களில் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவருக்கும் கொடுக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், இந்த படத்திற்கு அவர் கேட்ட சம்பளம் அந்த நாளில் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அவருக்கு கொடுத்து விட்டேன். பின்னர் படம் வெளியாகும் சமயத்தில் அவரே என்னைக் கூப்பிட்டு "சார், நான் கேட்ட தொகை கொஞ்சம் அதிகம் என்று நான் நினைக்கிறேன். அதனால் தவறாக நினைக்காமல் அந்த அதிக தொகையை நீங்கள் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.

வேறு எந்த நடிகருக்கும் இது போன்ற பெருந்தன்மை இருக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, நிஜ வாழ்விலும் ஒரு ஹீரோவாகவே ரஜினி எனக்குத் தோன்றுகின்றார்.   

ஆறிலிருந்து அறுபது வரை  

என் சிறு வயதிலேயே என்னை அசத்திய படம். தன் தம்பி தங்கைக்காக கஷ்டப்பட்டு உழைத்து பின் அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்படும் போது அவருடைய முக பாவங்கள், சூப்பர்! பின்னாளில் பணக்காரனாகியபின் அவர்களே வந்து அவரிடம் நிற்கும் சூழ்நிலை, மிகச் சிறந்த படம் இது. என் உயர்விற்கு உதவிய என் அண்ணன்கள் மீது எனக்கு மதிப்பு ஏற்பட இந்தப் படம் பார்த்த பாதிப்பு ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். "ஏற்றிவிட்ட ஏணியை ஒரு நாளும் மறக்கக் கூடாது"என்ற படிப்பினையை ஊட்டும் படம்.

நல்லவனுக்கு நல்லவன்
நல்லவனுக்கு நல்லவன் 

 முதல் பாதியில் ரௌடியாக வந்து விட்டு இரண்டாம் பாதியில் ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக ரஜினியை இரு வேறு பரிமாணங்களில் காட்டிய படம். மனைவி சொல்லுக்காக சண்டை போடாமல் அடிவாங்கி வந்துவிட்டு, "உங்களை அடிக்க வேண்டாம்னுதான் சொன்னேனே தவிர, ஒரு கோழையாக இருங்கன்னு சொல்லலையே"என்று சொன்னவுடன் அதே ரௌடிகளை போட்டு வெளுப்பாரே, அந்த இடம் இன்று நினைத்தாலும் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். மனைவி இறந்தவுடன், "அம்மா சாவை ஏம்பா சொல்லலை?" என்று கேட்ட மகளிடம் "கல்யாணத்துக்கு கூப்பிட்டாதான் போகணும், சாவு வீட்டுக்கு கூப்பிடாமலே போகணும், நீ கல்யாணத்துக்கும் கூப்பிடலை, உன் அம்மா சாவுக்கும் வரலை" என்ற வசனம் எந்த ரசிகனுக்கும் கண்ணில் நீர் வரவழைக்கும். படம் முடிந்து வெகு நேரம் என்னை பாதிப்பில் ஆழ்த்திய படம் இது.

ராஜாதி ராஜா

ஒரு அற்புதமான இரட்டை வேடக் கதை. போக்கிரி ராஜாவும் கிட்டத்தட்ட இதே கதைதான் என்றாலும், இந்தப் படத்தில் ரஜினியின் காமெடி ரசிக்க வைக்கும்.
க்ளைமாக்சில் "என்ன தூக்குல போட மாட்டாங்கன்னு தெரியும், ஏன்னா, நான் தப்பே பண்ணலையே" என்று சொல்லும் அப்பாவி ரஜினியை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது.  தப்பு செய்யாத ஒருவன் எவருக்கும் எக்காலத்திலும் பயப்பட வேண்டியதில்லை என்பது சத்தியமான வரிகள்.

தில்லு முல்லு

 இந்த தலைப்பை எழுதும்போதே மகிழ்ச்சி மனத்தில் நிறைந்து விடுகிறது. ஒரே ஒரு பொய், அதுவும் தான் செய்த தப்பை மறைக்க சொல்லி, அதன் விளைவாக நிறைய பொய்கள்.........அடுக்கடுக்காக அதன் விளைவுகள். இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு மிளிர்ந்ததற்குக் காரணம் தேங்காய் சீனிவாசன் மற்றும் சௌகார் ஜானகி அவர்களும்தான். குறிப்பாக, ரஜினி வீட்டில், "உங்க தலைல அடிபட்டது இப்போ எப்படி இருக்கு?" என்று தேங்காய் கேட்க, "சொல்லவே இல்லையேப்பா" என்று சொல்லிவிட்டு, சமாளிக்கும் விதமாக, "எனக்கு அடிபட்டத இவர்கிட்ட சொன்னேன்னு என்கிட்டே சொல்லவே இல்லையேப்பா" என்று ஜானகி சொல்ல, "இப்போ எவ்வளவோ பரவாயில்ல சார்" என்பாரே ரஜினி, டாப் கிளாஸ்! அந்த இன்டர்வியூ சீன், படத்தில் உச்சகட்ட காமெடி.

மிஸ்டர் பாரத்

ரஜினி ரசிகனாகவே என்னை மாற்றிய ஒரு படம். வழக்கமான பழி வாங்கும் கதைதான் என்றாலும் என்ன இருந்தாலும் தன் தகப்பன் என்ற முறையில் மற்றவர்களிடம் சத்யராஜ் மரியாதை இழக்கக் கூடாது என்பதில் உறுதி காட்டி க்ளைமாக்சில் அவர் உயிரையும் காப்பாற்றும் டிபிகல் மசாலா படம். சத்யராஜின் மகளைக் காப்பாற்றும் பொழுது கையில் காயம் பட, சத்யராஜ் "அது என்ன ரத்தம்" என்று கேட்க, என் ரத்தம்தான் என்று ரஜினி சொல்வார். உடனே, சத்யராஜ், "என் ரத்தமோன்னு நினைச்சேன்," என்று கலாய்க்க, "உங்க ரத்தம்தான்" என்பாரே, அந்த சீன் என் மனதில் இன்னமும் நிற்கிறது.

பில்லா


ஒரே படத்தில் டானாகவும் அப்பாவியாகவும் மிக அருமையாக பிரித்துக் காட்டிய படம் இது. ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தந்த மற்றுமொரு படம் என்றே நான் கருதுகிறேன். ஹிந்தி டான் படமும் நான் பார்த்து இருக்கிறேன், ஆனால், பில்லா என்னைக் கவர்ந்த அளவு அந்தப் படம் கவரவில்லை.

படிக்காதவன்

அண்ணியால் துரத்தப்பட்டு தம்பியையும் தன்னை வளர்த்தவரின் குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவன் கதை. தன் தம்பி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி தன் அண்ணன்தான் என்று தெரிய வரும்போது அவரின் தவிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார். அம்பிகாவின் கர்ப்பிணி வேஷத்தை உண்மை என்று நம்பி அவரிடமும் பின்னர் நாகேஷிடமும் பேசும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சகட்டம்.

அண்ணாமலை

ரஜினியின் பரிமாணத்தை கொஞ்சம் பெரிய அளவில் கொண்டுவந்த படம் என்றுதான் நினைக்கிறேன். சரத்பாபுவுடன் இணைந்து நடித்த மற்றுமொரு வெற்றிப் படம். ஏலத்தில் சொத்தை இழந்த சரத்பாபுவிடமே அந்த சொத்தைக் கொடுக்க சொல்லும் இடத்தில "கஷ்டப்பட்டவன் உயர்ந்த இடத்துக்குப் போகலாம், மேல இருக்கறவன் என்னிக்குமே கீழே விழக் கூடாது" என்று தத்துவம் பேசும் இடம் நம்மை நெகிழ வைக்கும்.

தம்பிக்கு  எந்த  ஊரு 


ஒரு பணக்கார இளைஞன் சாதாரணமானவனாய் கிராமத்தில் வாழும் படம். செய்த வேலைக்குக் கூலியை கொடுக்கும் செந்தாமரை, "என்னப்பா, பணத்தையே பார்த்ததில்லையா?" என்று கேட்கும்போது, "இந்தப் பணத்தைப் பார்த்ததில்லை" என்று சொல்லும் இடம் அருமை. உழைப்பின் அருமை தெரிந்தவராக அவர் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரியும். இன்றும், பணத்தின் அருமை தெரியாத பல இளைஞர்களைப் பார்க்கும்போது, இந்தக் காட்சி என் மனதில் வந்து ஓடும்.  


டிஸ்கி : இந்தத் தொடருக்கு யாரையாவது அழைக்கனுமே! ஓகே, வாங்க காயத்ரி தொடருங்க!

Sunday, December 5, 2010

பேசுவது எப்படி? - 3

முந்தைய இரண்டு பதிவுகள் படிக்க
1. பேசுவது எப்படி?
2. பேசுவது எப்படி -2

இந்த கால கட்டத்தில் தொலைபேசி ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அதுவும் கையோடு எடுத்துச் செல்லக் கூடிய (செல்)போன்கள் இல்லாத ஆசாமிகளே இல்லை என்று சொல்லலாம்

போனில் பேசுவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
நீங்கள் யாருக்காவது போன் செய்யும்போது நீங்கள் எந்த எண்ணை அழைத்தீர்களோ அதை உறுதி செய்யுங்கள்.பிறகு, நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள். பிறகு நீங்கள் பேச விரும்பும் ஆளை  அழையுங்கள்.
(உதாரணமாக, "வணக்கம், அது 12345 -ஆ  நான் எக்ஸ் பேசுகிறேன், மிஸ்டர் ஒய் இருக்காரா?" )
இப்படி செய்வதால் பல குழப்பங்கள் தவிர்க்கப் படும். எனக்குத் தெரிந்து நிறைய பேர் "ஹலோ, நான் யாரு தெரியுதா?" என்று கேட்பதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.

அதே போல், உங்களுக்கு போன் வந்தால், முதலில் உங்கள் எண்ணையும் உங்கள் பேரையும் சொல்லிவிடுங்கள். ராங் காலாக இருந்தால், அந்த முனையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். செல்போனாகவே இருந்தாலும் உங்கள் எண்ணையும் பெயரையும் சொல்வது நல்லதுதான். ஒரு வேளை, அவர் தவறாக அழைத்திருக்கலாம் அல்லவா?

போனில் பேசும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நிறைய பேர் ஏதாவது எழுதிக் கொண்டு அல்லது படித்துக் கொண்டு பேசுகின்றனர். இது தவறு. நீங்கள் ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு வேலை தான் செய்ய முடியும். காது எதிர் முனையில் இருப்பவர் சொல்வதைக் கேட்கும்போது, உங்கள் கண்ணும் மனமும் வேறு எதிலாவது கருத்தாக இருக்குமானால், அது இரண்டு வேலைகளையும் கெடுத்து விடும். "சாரி, நான் கொஞ்சம் பிசி. கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கள் அல்லது நான் பிறகு அழைக்கிறேன்" என்று சொல்லி உங்கள் வேலையை முடித்துக் கொண்டு பிறகு அவரிடம் பேசுவது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப் படுத்தும்.

மற்றுமொரு விஷயம். எந்தக் காலத்திலும் பொது இடத்தில இருக்கும்போது உங்கள் வீட்டு விலாசங்களை போன் மூலம் சொல்லாதீர்கள். வேண்டுமானால் எஸ்.எம்.எஸ். செய்யுங்கள். உங்கள் வீட்டு விஷயங்களை பொது இடங்களில் விவாதிப்பதும் உங்களுக்கு ஆபத்தாகவே முடியும். "அந்த ரூம்ல பீரோ லாக்கர்ல பணம் வச்சிருக்கேன்" போன்ற விஷயங்களை திருடர்கள் கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லத் தேவையில்லை.

இன்னொன்று - இது கொஞ்சம் காமெடி கலந்த ஆனால் தவிர்க்க வேண்டிய ஒன்று. செல்போனில் பேசும்போது அண்ணா நகரில் இருந்து கொண்டு "தாமஸ் நகர்ல இருக்கேன் சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்று பலரும் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒன்று சிந்திக்க வேண்டும், இதைக் கேட்கும் யாருமே அந்த ஆளைப் பற்றி தவறாக தான் நினைப்பார்கள். இப்படி முகம் தெரியாதவரிடம் கூட அவமானப் பட தேவையே இல்லை. "வந்துகிட்டிருக்கேன் சார், பஸ்லதான் இருக்கேன்"என்று பொதுவாகப் பேசும்போது பிறர் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.

கடைசியாக ஒன்று, பொது இடங்களில் போன் பேசும்போது கூடுமானவரை மெதுவாகப் பேசுங்கள். உரத்துப் பேசுவதால், உங்கள் மீது பிறருடைய கவனத்தை ஈர்க்கிறீர்கள், இது ஆபத்தில் முடியலாம். இன்னொன்று மற்றவருடைய வேலையையும் கெடுக்கிறீர்கள் இது மனித உரிமை மீறல்.

அளவோடு பேசுங்கள், அறிந்து பேசுங்கள், உங்கள் பேச்சு அழகாக இருக்கும்!

மீண்டும் சிந்திப்போம்!

டிஸ்கி : பேசுவது எப்படி மூணாவது பார்ட் கேட்ட வெங்கட்டுக்காக் இந்தப் பதிவு (அதுனால அவருக்குப் பேசத் தெரியாதான்னு யாரும் கேக்க வேண்டாம்) 

Wednesday, December 1, 2010

பதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)

முன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான்.

நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்குக் காரணமே இந்த பதினெட்டு வயது ஆனவர்கள்தான். குறிப்பா படிச்சவங்கதான்.



எப்படின்னு கேக்கறீங்களா? "இந்த அரசாங்கம் சரியில்ல. இவன் ரொம்ப ஊழல் பண்றான், அவன் கோடி கோடியா சேர்த்துட்டான், ஒரு பயலும் சரியில்லப்பா, இந்த எலக்ஷனே  வேஸ்ட்" இப்படியெல்லாம் புலம்புவாங்களே தவிர ஒருத்தராவது இதுக்கு மூல காரணம் தான்னு புரிஞ்சுக்கரான்களா, இல்லவே இல்லை!

இப்ப சொல்றேன், நீங்க பதினெட்டு வயதுக்கு மேல ஆனவரா? முதல்ல வாக்காளர் பட்டியல்ல உங்க பேர் பதிவு பண்ணுங்க. எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. இவருக்குதான்னு நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தோனுற ஆளுக்கு வோட்டு போடுங்க. அப்புறம்  எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை குறை சொல்ல வாங்க.  முதல்ல நம்ம கடமையைச் செஞ்சுட்டுதான் அடுத்தவங்களை குறை சொல்லணும்.

வேற ஏதாவது இங்க எதிர்பார்த்து வந்த பதினெட்டு வயது ஆகாத "பெரிய"வங்களுக்கு: பதினெட்டு வயசு எப்ப முடியுதோ, அன்னிக்கே போய் உங்க பேரை வாக்காளர் லிஸ்ட்ல சேர்க்கற வழியப் பாருங்க. வருங்காலம் உங்களை நம்பித் தான் இருக்கு.