"ஆயிரம்தான் சொல்லுங்க, இந்த விக்ரமுக்கு இந்தத் திமிர் இருக்கக் கூடாது" ஆரம்பித்தாள் மங்களம்.
"பங்காளிகள் சீரியல் பத்தித் தானே சொல்றீங்க. உண்மைதான், சொந்தத் தம்பிதானேங்கற அறிவு கொஞ்சம்கூட இல்லாம இப்படி கொடுமைப் படுத்தறானே, இவனை ஆண்டவன்தான் தண்டிக்கணும்" தன் பங்குக்கு ஆமோதித்தாள் பார்வதி.
"அது பரவாயில்லையே அக்கா, இந்த சம்பந்தம் இருக்காரே, அதாங்க்கா, "காதல் சாதி" சீரியல்ல மாலதியோட அப்பாவா வருவாரே, அவர்தான், அவர் என்ன இவ்வளவு கொடுமைக் காரரா இருக்காரு. மாலதி ஒரு பையன லவ் பண்றா. அதுக்கு இப்படி குதிக்கிறாரே, இத்தனைக்கும் அந்தப் பையன் வேற ஜாதியா இருந்தாலும், குணம் தங்கமா இருக்கு, அது போதாதா?" சுஜாதாவின் புலம்பல் இது.
"என்னதான் சொல்லு, இந்தக் காதலை வெறுக்கிறவங்க மேல எனக்கு அப்படி ஒரு வெறுப்புதான். நம்ம புள்ளைங்க நல்லா இருக்கணும்னு ஆசைப்படும்போது, அதுக்கு குறுக்க நிக்க எனக்கு மனசு வராதுப்பா", இது மங்களம்.
"இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில அந்த மாலதிப் பொண்ணு அப்பா மேல உள்ள பாசம் குறையாம அதே நேரத்துல தன்னோட காதலை மறக்கவும் முடியாம எவ்வளவு போராடறா பாருங்கக்கா, அந்தத் துணிவும் தைரியமும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு" சுஜாதாவின் சர்டிபிகேட் கேட்டு தலையை அசைத்து ஆமோதித்தாள் மங்களம்.
"அய்யய்யோ, மணி ஆயிடுச்சு, அப்புறமா வர்றேன்க்கா" என்றபடி சுஜாதா வெளியேறினாள். "சரி மங்களம், எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வர்றேன்" என்றபடி பார்வதியும் வெளியேற, படபடப்புடன் உள்ளே வந்தாள் ஜமுனா, பக்கத்து வீட்டுக் காரி.
"மங்களம், என்ன கொடுமை இது, இப்பத்தான் கேள்விப்பட்டேன், உம்மக சாந்தி அந்தக் கீழ்சாதி பய கோபாலோட பழகுறாளாமே, இப்பவே சொல்றேன் பாத்து நடந்துக்கோ!" ஜமுனா சொல்ல சொல்ல,
"அடிப்பாவி, நிஜமாத் தான் சொல்றியா, பாவி மக என் தலைல கல்லைத் தூக்கி போட்டுட்டாளே, என்ன கண்றாவி காதலோ, இதை எப்படி நிறுத்தப் போறேன் தெரியலையே, எல்லாம் அவர் கொடுக்கற இடம், இந்த சிறுக்கி மனசை அப்படி என்னத்தைக் கொடுத்து அவன் கெடுத்துட்டான்னு தெரியலையே" என்று கோபம்
பொங்க புலம்ப ஆரம்பித்தாள் மங்களம்.
**********
டிஸ்கி : யார் சொன்னது, சீரியல், சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று?