அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 14, 2009

என்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 1



என் கண் கண்ட தெய்வங்களான என் பெற்றோர் பற்றியே இந்தப் பதிவு.
ஸ்ரீனிவாசகோபாலாசாரியார் , தெரிந்தவர் மத்தியில் செல்லப்பா சுவாமி - இதுதான் என் தந்தை பெயர்.

நல்ல ஆச்சாரமான வைதீக குடும்பத்தில் பிறந்து வேதங்களைக் கற்று தேர்ந்து ஏறக்குறைய 65 வருடங்களாக வேத பாராயணம் செய்து வரும் ஆச்சாரமான ஒழுக்க சீலரான இவருடைய மகன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான்.
ஏழு வயதிலேயே தன் தாத்தாவைப் போல், அப்பாவைப் போல், தானும் வேதம் ஓதும் தொழிலே செய்யப் போவதாய் முடிவு செய்து அதன்படி மன்னார்குடியில் புகழ் பெற்று விளங்கிய ஸ்ரீ அண்ணாஸ்வாமி வேத பிரபந்த பாடசாலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் முழுமையாக வேதங்களைக் கற்று விற்பன்னர் ஆனார். சொற்ப வருவாயே வந்தாலும் இதுதான் தன் குலத் தொழில் என்று உறுதியாக நின்று மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் வேதம் ஓதும் பணியிலும் சேர்ந்தார்.
பொருட்செல்வத்தில் சற்று குறையிருந்தாலும் மழலைசெல்வத்திலும் கடவுளின் அருட்செல்வத்திலும் அவருக்கு குறையே இல்லை. பல குழந்தைகள் இருந்தாலும் அனைவரையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். கடவுள் அருளால் நாங்களும் நன்றாகப் படித்தோம். என் மூத்த அண்ணன் ஒரு வேலையில் சேர்ந்து, குடும்பத்திற்கு உதவியாய் இருக்கும் வரை எங்களை எல்லாம் நன்கு படிக்க வைத்து ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுத்த மாபெரும் தெய்வம் என் தந்தை.
என் வீட்டுக்கும் நாங்கள் படித்த பள்ளிக்கும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். காலையில் அவசரமாக பழைய உணவைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் பள்ளிக்கு செல்வோம். வேகாத வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு குடையோ செருப்போ கூட இல்லாமல் நடந்து வந்து எங்களுக்கு மதிய உணவைக் கொடுப்பார். அது மட்டுமல்லாமல் எங்களுடைய துணிகளை குளத்திற்கு எடுத்து சென்று எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக, துவைத்து, பின்பு உலர்த்தி மடித்து வைத்து....அப்பப்பா......அதில் இருந்த நேர்த்தியும், அதில் தெரிந்த பாசமும், எழுத்தில் வடிக்க முடியாது.
தன் பணக்கஷ்டம் வெளியில் தெரியாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து சந்தோஷப் பட்டவர் எங்கள் தந்தை. இன்று நானும் என் சகோதர சகோதரிகளும் நல்ல வேலையில் நல்ல நிலையில் இருக்கிறோம். இருந்தாலும், இன்றும் தன் சொந்த உழைப்பையே நம்பி வேத பாராயணம் செய்யும் உத்தமர்.
"ஏம்பா, நாங்கதான் நல்ல நிலையில் இருக்கோமே, நீங்க என் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டு அலையணும், ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?" என்று கேட்டல்,
"நீ உன்னை வளர்த்த அப்பாவை வச்சு காப்பாத்தனும்னு நினைக்கிறே! சந்தோசம், ஆனா என்னையும் என் பசங்களையும் வளர்த்த வேதத்தை நான் வச்சுக் காப்பாத்தனும்னு நான் ஆசைப் படறேன். அதான், இன்னும் வேத பாராயணம் செய்யறதை விடறதா இல்லை" என்று வேடிக்கையாகவும் லாஜிக்காகவும் சொல்லி சிரிப்பார் அவர்.
வயதான தாயைக் கஷ்டப் படுத்தக்கூடாது என்பதற்காகவே, அவர் சொந்த ஊரை விட்டு எங்கும் செல்லவில்லை. என் மாமாதாத்தா (அவர் தாய்மாமன்) சென்னையில் நல்ல நிலையில் இருந்தபோது, "செல்லப்பா, இங்க வந்துடு, இங்க ஓரளவு வருமானம் வரும், உன் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதிகள் இருக்கும்" என்று அழைத்தபோது, "அம்மா இங்குதான் இருக்க விரும்பிருகிறார், அவரை விட்டு எங்கும் செல்வதாக இல்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அப்பா.
என் தந்தை அவர் பெற்றோரிடம் காட்டிய பாசத்திலும், பணிவிலும் ஒன்றிரண்டு சதவீதம் இன்றுள்ள பிள்ளைகளிடம் இருந்தாலே போதும், முதியோர் இல்லங்களின் தேவை இருக்காது என்பது என் கருத்து.
சமீபத்தில் 2007 ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கையால் "ஸ்ரௌதி குல திலகம்" (வேத விற்பன்னர் குலத்தில் ஒரு திலகம் என்று பொருள்) என்ற விருது பெற்று சிறப்பிக்கப்பட்டார் என் தந்தை.


என் தாயார் பற்றி குறிப்பிட வேண்டுமானால், தனியாக ஒரு பதிவு போட வேண்டும். சுருங்கச் சொன்னால், வேதவல்லி அம்மையார் (என் தாயார் பெயர்), தன் கணவரையும் கணவர் குடும்பத்தையும் அனுசரித்துப் போய், பிள்ளைகளையும் பாசத்தோடு வளர்த்து, இன்று எல்லா மருமகள்களையும் மகள்களாகவே பாவித்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். "உங்களுக்கு என்ன மாமி, உங்க பசங்க எல்லாம் சொக்கத் தங்கம், இப்படி பிள்ளைங்களைப் பெற என்ன தவம் செஞ்சீங்களோ!" என்று தெருவில் உள்ள எல்லோரும் போற்றும்படியான வாழ்வை எங்களுக்கு பெற்று தந்தவர்.
உண்மையில், நாங்கள் தான் இப்படிப் பட்ட தாய் தந்தையரைப் பெற தவம் செய்திருக்கிறோம்.
"இறைவா, மீண்டும் ஒரு பிறவி அமையுமானால், அவர்கள் இருவரும் என் மக்களாகப் பிறந்து, என் நன்றிக் கடனை ஓரளவாவது நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்" என்பதே என்னுடைய பிரார்த்தனை.
டிஸ்கி: என்னைபோன்ற என்னைவிடவும் பெற்றோரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

22 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

thiyaa said...

அருமையான ஆக்கம்
வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் அன்பரே

நல்லதொரு இடுகை - மனம் மகிழ்கிறது - பெற்றோரை வணங்குபவர்களுக்கு ஒரு குறையும் வராது

நல்வாழ்த்துகள்

vasu balaji said...

படிக்கவே பரம சந்தோஷமாயிருக்கிறது. இந்த நேசம் என்றும் நிலைத்திருக்கட்டும். வேதவித்தின் ஆசியை விட வேறென்ன பெரிசு இருக்க முடியும்.

Chitra said...

தாய் தந்தை kku வணக்கம் சொல்லும் தங்களின் மரியாதைக்குரிய உள்ளத்துக்கு என் வணக்கம்.

புலவன் புலிகேசி said...

இது போன்ற நன்றி கடன் பாக்கி ஒவ்வொரு மனிதனுக்குமுள்ளது...நல்ல பகிர்வு

பிரபாகர் said...

//"இறைவா, மீண்டும் ஒரு பிறவி அமையுமானால், அவர்கள் இருவரும் என் மக்களாகப் பிறந்து, என் நன்றிக் கடனை ஓரளவாவது நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்" என்பதே என்னுடைய பிரார்த்தனை.
//
இந்த வரிகள் உங்கள் பெற்றோரை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள் என்பதை விளக்குகிறது. அருமைங்க...

பிரபாகர்.

ராமலக்ஷ்மி said...

பெறறவருக்கு மரியாதை செய்யும் அழகான பதிவு. வாழ்த்துக்கள்.

Paleo God said...

டிஸ்கி: என்னைபோன்ற என்னைவிடவும் பெற்றோரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

TOUCHING....

ஸ்ரீராம். said...

பெற்றவர்களுக்கு இந்த மாதிரி பிள்ளைகள் வரம். இந்த மாதிரி வரங்களை பெறுமிடத்தில், ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் பெற்றோரை அடைந்தது உங்களுக்கு ஒரு வரம். உங்களைப் பெற்றவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

அடலேறு said...

நெகிழ்ச்சிப்பதிவு

கௌதமன் said...

பெற்றோரை மதிக்கும் உங்க பண்பு மிகவும் உயர்ந்த ஒன்று.
வாழ்க வளமுடன்!

cho visiri said...

"என்னைச் செதுக்கிய தெய்வங்கள்"
Overall the presentation is good in the sense that you want to bring on record your respects for your parents.


"என்னைச் செதுக்கிய தெய்வங்கள்
//"இறைவா, மீண்டும் ஒரு பிறவி அமையுமானால், அவர்கள் இருவரும் என் மக்களாகப் பிறந்து, என் நன்றிக் கடனை ஓரளவாவது நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்" என்பதே என்னுடைய பிரார்த்தனை.
//

Three things would say on the subject.
(i) This prayer shall not be granted by God , for your parents shall not have rebirth. As of now, the same status can not be assumed for you, I am afraid.

(ii) In my view, your parents will appreciate if you follow your parents by bringing up your sons/daughters the same way you were brought up by your parents..

CS. Mohan Kumar said...

உன் தந்தையை பற்றி படிக்கும் போது நெகிழ்வாக உள்ளது. நல்ல பதிவு. அம்மா பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

பெற்றோரை விட சிறந்த தெய்வம் இருக்க முடியுமா?

பெசொவி said...

Cho visiri said:
//"என்னைச் செதுக்கிய தெய்வங்கள்
//"இறைவா, மீண்டும் ஒரு பிறவி அமையுமானால், அவர்கள் இருவரும் என் மக்களாகப் பிறந்து, என் நன்றிக் கடனை ஓரளவாவது நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்" என்பதே என்னுடைய பிரார்த்தனை.
//

Three things would say on the subject.
(i) This prayer shall not be granted by God , for your parents shall not have rebirth. As of now, the same status can not be assumed for you, I am afraid.

(ii) In my view, your parents will appreciate if you follow your parents by bringing up your sons/daughters the same way you were brought up by your parents..//

நீங்கள் சொல்லியுள்ளது உண்மைதான்.....வைணவ சித்தாந்தப்படி, ஒரு வைணவன் தன்னுடைய இந்தப் பிறவி முடிந்தவுடன் மீண்டும் பிறவாத வகையில் வைகுண்டம் எனும் திவ்ய திருப்பதி சென்று அங்கு பகவானுக்கு சேவை செய்வதே தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அதன்படி, என்னுடைய பெற்றோர் "பர சமர்ப்பணம்" என்னும் சரணாகதி செய்து பகவானுடைய திருவடியை அடைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். நான் இன்னும் அந்த சரணாகதி செய்யவில்லை என்பதும் உண்மைதான்.

ஆனால், ஒருவேளை, பிறவி அமையுமானால், அவர்களுக்கு என்னுடைய நன்றிக்கடனை செலுத்த வேண்டும்படி அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஒரு வேளை, அவர்களுடைய மக்களாக இருக்கும் காரணத்தினால், எனக்கும் வைகுண்டம் செல்லும் அதிர்ஷ்டம் இருக்குமானால், அங்கும் அவர்களுக்கு என்னுடைய சேவையைத் தொடர வேண்டும் என்று என்னுடைய பிரார்த்தனையை modify செய்கிறேன்.

Prathap Kumar S. said...

//என் தந்தை அவர் பெற்றோரிடம் காட்டிய பாசத்திலும், பணிவிலும் ஒன்றிரண்டு சதவீதம் இன்றுள்ள பிள்ளைகளிடம் இருந்தாலே போதும், முதியோர் இல்லங்களின் தேவை இருக்காது என்பது என் கருத்து.//

இதுதாங்க உண்மை... நல்லபதிவு...
உங்களைப்போல எல்லாரும் இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும்...

பெசொவி said...

பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

Madhavan Srinivasagopalan said...

-----
"Blogger cho visiri said...
(ii) In my view, your parents will appreciate if you follow your parents by bringing up your sons/daughters the same way you were brought up by your parents.. "
-----

Fantastic message. Thanks to the original author and those commented.

பி.கு.
எவ்வளவு தெளிவான கருத்து 'சோ விசிறி' அவர்களிடமிருந்து.

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவிற்கு காப்புரிமை ஏதேனும் உண்டா்ட?
நானும் எனது பெற்றோருக்கு இதுபோல் (ஆம் இதைபோலவே) பதிவு இடலாம் என நினைக்கிறேன்.
குறைந்த பக்ஷம் எனது நண்பர்களுக்கு உங்கள் பதிவை பரிந்துரைகிறேன்.

பெசொவி said...

// maddy73 said...
உங்கள் பதிவிற்கு காப்புரிமை ஏதேனும் உண்டா்ட?
நானும் எனது பெற்றோருக்கு இதுபோல் (ஆம் இதைபோலவே) பதிவு இடலாம் என நினைக்கிறேன்.
குறைந்த பக்ஷம் எனது நண்பர்களுக்கு உங்கள் பதிவை பரிந்துரைகிறேன்//


தயவு செய்து டிஸ்கியைப் பார்க்கவும்...........உங்கள் பெற்றோரை நீங்கள் நேசிப்பது குறித்து எனக்கும் மெத்த மகிழ்ச்சி!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கடேசன், உங்களைப் போல குழந்தைகளும், உங்அள் பெற்றோர் போன்ற செல்வங்களும் நம் நாட்டில் இருந்தால் போதும். என் வணக்கங்களை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

rengamani said...

Nanba, un padhivu pidichchirukku.
I am from Mannargudi. I know Sri.U.Ve. Karaikukudi Chellappa swami. I know your Brother,Vasu Badri etc.,May be we are the same age group and were friends in school days..I am happy to read about my old friends. Gopalanukku kaingariyam panna kudumbangalai avarthan rakshikkirar. Sandhegamillai.
R. Rengamani, rrengamani@yahoo.com
rengamani1952@gmail.com