அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, October 19, 2010

செய்தித்தாள் சொன்ன & சொல்லாத கதை

டிஸ்கி : ஒரு சாதாரண கதை, அசாதாரண கோணத்தில்


செய்தித்தாள் சொன்னது:
ஜனவரி : கா.மு.எ.க. தலைவர் பழனிசாமி மரணம். கட்சி துணை செயலாளர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் பழனிச்சாமி நேற்று அதிகாலை காலமானார். தீவிர வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்த அவர் நேற்று முன் தினம் இரவு படுக்கப் போகுமுன் விஷம் கலந்த பாலை குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் அவர் உடலைப் பரிசோதித்த அரசு டாக்டர் தெரிவித்தார். கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் ஒரே மகன் ராஜதுரை விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு அய்யாசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஜூன் : கா.மு.எ.க. தலைவர் ராஜதுரை சாலை விபத்தில் மரணம். 
சமீபத்தில் காலமான கா.மு.எ.க. தலைவர் பழனிசாமியின் மகன் ராஜதுரை. இவர் தந்தைக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டது தெரிந்ததே. அவர் நேற்றிரவு, ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு லாரி அவர் கார் மீது மோதியதில் அந்த இடத்திலேயே இறந்தார். கட்சியின் அடுத்த தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கட்சியின் துணைப் போது செயலாளர் அய்யாசாமி நிருபர்களிடம் கூறினார்.


ஜூலை: கா.மு.எ.க. தலைவராக திரு அய்யாசாமி தேர்வு. கட்சி செயற்குழு கூடி முடிவெடுத்தது.

கா.மு.எ.க. கட்சியின் தலைவர் பழனிச்சாமியும் அவர் மகன் ராஜதுரையும் சமீபத்தில் அடுத்தடுத்து இறந்தது தெரிந்ததே. இதை அடுத்து, அந்தக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு கட்சியின் செயற்குழு நேற்று கட்சி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர் பழனிசாமியின் கனவுகளை நிறைவேற்றுவதே தன்னுடைய லட்சியம் என்று கூறினார்.

செய்தித்தாள் சொல்லாதது:

"ஐயா, எப்படியோ நீங்க தலைவராயிட்டீங்க! அடுத்தது சீக்கிரம் முதல்வரா?" காவிப்பல் தெரிய சிரித்த துரைசாமியிடம், "பின்ன என்னடா? காலம் காலமா நான் இந்தக் கட்சியில இருக்கேன். என்னை விட்டுட்டு தன் பையனை தலைவர் ஆக்கணும்னு அந்தாள் ஆசைப்பட்டார்.  விடுவேனா, நானு? அதான், பால்ல விஷத்த கலந்து குடுத்தேன். தலைவர் அவுட். சில மாசத்திலேயே அவர் பையனையும் பரலோகம் அனுப்பிட்டேன்.  இப்போ, நானே தலைவரா ஆயிட்டேன்" பெருமிதம் பொங்க சொன்னார் அய்யாசாமி.

சில வருடங்கள் கழித்து - செய்தித்தாள் சொன்னது :

ஜூன்  : சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல்.


சுயேச்சைகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆளும் மா.மு.இ.க. தன் பெரும்பான்மையை இழந்தது. இதை அடுத்து, முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.


செய்தித்தாள் சொல்லாதது:

"தலைவரே, நானும் எத்தனையோ நாளா உங்க கிட்ட கேட்டிருக்கேன், எனக்கும் எம்.எல்.ஏ. வா ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை" இளித்தான் துரைசாமி.
 
"என்னடா, இப்படி கேட்டுட்ட? உனக்கு இல்லாத சீட்டா? கவலையே படாத, உனக்கு எந்த தொகுதி வேணும்? ஒரு அப்ளிகேஷன் பாரம் எழுதி கட்சி ஆபீஸ்ல கொடு."என்ற ஐயாசமியிடம் "அதுக்கில்லீங்கையா, உங்க மகன்தான் என்னை போட்டி போட வேண்டாம்னு சொல்றாரு". "அவனுக்கு என்னடா தெரியும்? அவனை விடு,  நீயெல்லாம் தாண்டா எனக்கு தூண் மாதிரி. நீ இல்லைனா எனக்கு எதுவுமே இல்லடா" ஆதரவாக முதுகைத் தடவிக் கொடுத்தார் அய்யாசாமி.
 
செய்தித்தாள் சொன்னது:
 
ஜூலை  : கட்சியில் இளைஞர்களுக்கே முன்னுரிமை - அய்யாசாமி பேட்டி
 
வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் படும் என்று கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி தெரிவித்தார். நடராஜன் தன் மகன் என்பதால் மட்டும் அவருக்கு சீட் வழங்கப் படவில்லை என்றும், இது கட்சியின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார். பல வருடங்களாக கட்சியில் இருக்கும் சிலருக்கு டிக்கெட் வழங்கப் படாதது ஏன் என்று கேட்கப் பட்டபோது அப்படி பார்த்தால் கட்சி அலுவலகத்தில் இருக்கும் நாற்காலி மேசை போன்றவற்றிற்கு கூட அந்தத் தகுதி இருப்பதாக அவர் நகைச்சுவையுடன் பதில் அளித்தார். பேட்டியின்போது உடனிருந்த துரைசாமி, தலைவரின் முடிவை தான் முழு மனத்தோடு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பல வருடங்களாக இந்தக் கட்சியில் இருந்து வந்திருக்கும் இவருக்கும் எம்.எல்.ஏ. சீட் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ஆகஸ்ட் : கா.மு.எ.க. தலைவர் மரணம். தொண்டர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி நேற்று காலை காலமானார். கடந்த சில நாட்களாகவே அவர் சோகமாக இருந்ததாகவும், நேற்று முன் தினம் இரவு தூங்கப் போகும்போது பாலில் விஷம் கலந்து குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே உயிர் போய் விட்டதாகவும் உடலைப் பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். அவருடனேயே இருக்கும் தொண்டரான துரைசாமி "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் மகன் நடராஜன் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு துரைசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

(எஸ், நீங்க எதிர்பார்த்த மாதிரி, கொஞ்ச நாளிலேயே நடராஜன் கார் விபத்தில் இறந்ததும் திரு துரைசாமி அடுத்த தலைவர் ஆனதும் உண்மைதான்!)

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மங்குனி அமைச்சர் said...

உலகம் உருண்டைன்னு நிரூபிச்சிடின்களே

இம்சைஅரசன் பாபு.. said...

கா.மு.எ.க-முழுமையான விரிவாக்கம் தேவை

இம்சைஅரசன் பாபு.. said...

பழனிச்சாமி,அய்யாசாமி ,துரைசாமி.....என்று ஒரே சாமியாக இருக்கிறது

இம்சைஅரசன் பாபு.. said...

தேர்தல் நெருங்க நெருங்க ........இந்த மாதிரி நிஜத்திலும் நடக்கும் போல இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சைக்கிள் தொடர்கதைன்னு டைட்டில் கொடுத்திருக்கலாம்..

Madhavan Srinivasagopalan said...

நா "பே.வா.பு.பு.ப.க." கட்சில தொண்டனா சேர்ந்த உடனேயே எனக்கு நல்ல ஐடியா தாரீங்களே.. சூப்பரு..

வெங்கட் said...

நல்ல கதை..

ஆனா 2 இடத்துல லாஜிக் இடிக்குது..

நொ. 1 :

தலைவர் பழனிசாமி இறந்தபிறகு.,
துணை பொது செயலாளாரா இருந்த அய்யாசாமி
அடுத்த தலைவரா ஆனாரு.. ஓ.கே..

// "தலைவரே, நானும் எத்தனையோ நாளா
உங்க கிட்ட கேட்டிருக்கேன், எனக்கும் எம்.எல்.ஏ. வா
ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை" இளித்தான் துரைசாமி. //

ஆனா பழனிசாமி இறந்த பிறகு
ஒரு M.L.A-வா கூட இல்லாத துரைசாமி
எப்படி அடுத்த தலைவர் ஆக முடியும்..?

நெ. 2 :

கட்சியின் தலைவர்கள்
அடுத்தடுத்து மரணம்..
அதுல ரெண்டு தற்கொலை.,
ரெண்டு ஆக்ஸிடெண்ட்..

நம்பற மாதிரி இல்லையே..!!

ஒருவேளை அரசியல்ல இது சகஜமோ..?!!

Chitra said...

(எஸ், நீங்க எதிர்பார்த்த மாதிரி, கொஞ்ச நாளிலேயே நடராஜன் கார் விபத்தில் இறந்ததும் திரு துரைசாமி அடுத்த தலைவர் ஆனதும் உண்மைதான்!)

....ஆஹா....

ஸ்ரீராம். said...

சாமி....இது அரசியல்...!

NaSo said...

நம்ப கட்சிலே இந்த மாதிரி எல்லாம் நடக்காதுங்க.

R.பூபாலன் said...

அந்த கட்சியோட கொ.ப.செ நீங்கதான்னு
ஒரு பேச்சு வருதே உண்மையோ...