அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 6, 2010

நானும் இந்த வருஷ தீபாவளியும்

 என்னோட போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி டிவி, நெட் பக்கம் போகாம இந்த தீபாவளிய கொண்டாடனும்னு தான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா பாருங்க, இந்த சன் டிவியில பட்டிமன்றம் தலைப்பு "இன்றைய தலைமுறை பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா?"ன்னு இருந்ததால ஒரு சுவாரசியத்துக்காக அந்த நிகழ்ச்சி மட்டும் பார்த்தேன். தீர்ப்பு மட்டும் பாக்கலை, கேபிள் ப்ராப்ளம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், என் பத்து வயது பெண்ணிடம் கேட்டேன், "நீ சொல்லு எங்களோட கம்பேர் பண்ணும்போது உங்களுக்கெல்லாம் கிடைச்சது அதிகமா, அல்லது நீங்க இழந்தது அதிகமா?" அதுக்கு அவ சொன்னா, "என்னப்பா இது அர்த்தமற்ற கேள்வி? நீயே சொல்லியிருக்க, உனக்கு வருஷத்துக்கு ஒரு தடவைதான் டிரஸ், ரெண்டு மத்தாப்பு டப்பாவும் கலர் தீப்பெட்டியும் தான் பட்டாசு. ஆனா எனக்கு அப்படியா? அதுனால எங்களுக்கு கிடைச்சதுதான் அதிகம்." என்றால் அவள்.

எதிர்பார்த்த மாதிரியே, வசதிகள் பல கிடைத்துள்ளன என்று ஒரு சாராரும் "அதெல்லாம் சரி, ஆனால் ஒழுக்க குணங்கள் இழந்துள்ளார்களே"என்று மறு சாராரும் வாதம் செய்தார்கள். நடுவர் தீர்ப்பு என்னவென்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.

எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு(ரொம்ப நாள் கழித்து உறவுகள் கூடி மகிழ்ந்த தருணம் அது), குழந்தைகளோடு விளையாடலாம் என்று நினைத்தால் அவர்கள் உறவுக்கார சிறுவர்களோடு விளையாடுவதையே விரும்பினார்கள். நெட் பக்கமும் போக விரும்பவில்லை. எனவே, எனக்கு மிகவும் பிடித்த வேலை செய்தேன். (நீங்க நினைச்சது சரி......................தூங்கினேன்).

ஒரு மூன்று மணி போல் எழுந்தேன். "பிள்ளைங்களா, விளையாடலாமா?" என்று என் குழந்தைகளையும் அண்ணன் பசங்களையும் அழைத்தேன். எல்லோரும் ஒரே குரலாக, "அய்யய்யோ, டிவியில விஜய் படம் இருக்கு, நாங்க அங்க போறோம்" என்றார்கள். (விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?) "அதெல்லாம் முடியாது, இன்னிக்கு டிவியோ நெட்டோ கிடையாது. எப்ப பார்த்தாலும் சினிமா தானா? நத்திங் டூயிங்" என்றேன். என் மகள் என்னிடம் "இப்போ புரியுது, உங்களை விட, நாங்க இழந்தது அதிகம்தான். ஒரு டிவி பாக்க முடியலை, என்ன வசதியோ?" என்றாள். அவளிடம் நான் எதுவும் பேசவில்லை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து, அவள் பையன் அவளிடம் இதே வார்த்தைகளைப் பேசும்போது, அவளும் இது போன்ற ஒரு பதிவை எழுதுவாள், அப்போது புரியும் அல்லவா?

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சிவராம்குமார் said...

எனக்கென்னவோ நம்ம காலத்திலும் டிவி இருந்து இந்த அளவுக்கு படங்கள் இருந்திருந்தா நாமும் இப்படித்தான் இருந்திருப்போம்னு தோணுது!!!

Prathap Kumar S. said...

சூப்பர் பதிவு சார்... இன்னிக்குத்தான் உங்க வலைப்பூ கேப்ஷன்ல இருக்கற மாதிரி எழுதியிருக்கீஙக..:))

//விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?) ..

ஹஹஹஹ விஜய் மாதிரி நீங்களும் பில்டப் நிறைய கொடுங்க....என்னசார் இதுகூட தெரியாம...என்னமோ போங்க....:))

vasu balaji said...

ஆஹா! யாப்பீ தீவாளிதானா:))

Madhavan Srinivasagopalan said...

Interesting..

உண்மைதானுங்கோ.... நா காலேஜு படிச்சப்ப எங்க அக்கா கொழைந்தங்க (3-7 வயசு புள்ளைங்க), நா அவங்களோட வெளையாடி சந்தோஷப் படலாம்னு பாத்தா, 'போ மாமா, நீ ஒன்னோட ஃபெரண்டு கூட வெளையாடு, நா பக்கத்துவீட்டு பிரியாவோட வேலையாடுரோம்னு" சொல்லிட்டாங்க.

இப்ப எனது பையன், பொண்ணு என்னோட எப்ப வெளையாடுவாங்க, எப்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சுக்க அங்க அக்கா புள்ளைங்க எனக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க.

வெங்கட் said...

// "பிள்ளைங்களா, விளையாடலாமா?" என்று
என் குழந்தைகளையும் அண்ணன் பசங்களையும்
அழைத்தேன். எல்லோரும் ஒரே குரலாக,
"அய்யய்யோ, டிவியில விஜய் படம் இருக்கு,
நாங்க அங்க போறோம்" என்றார்கள்.
( விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு
விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ? ) " //

ஆமா முதல்ல " வாங்க விளையாடலாம்னு "
கூப்பிடுவீங்க.. அப்புறம் அப்படியே மெதுவா
" என் பிளாக் படிங்கன்னு " சொல்லுவீங்க..
இது அவங்களுக்கு தெரியாதா என்ன..?

விஜய் படம் பார்க்கிறதை விட இது
கொடுமை தானே..?!!
அதான் " எஸ் " ஆயிட்டாங்க..

ஸ்ரீ. வரதராஜன் said...

நல்லாத்தான் இருக்கு. குழந்தைகளின் மனசைப் படிக்க நம்மால் சில சமயங்களில் முடியாது. அவர்கள் உலகமே தனிதான்.

மங்குனி அமைச்சர் said...

அதெல்லாம் முடியாது, இன்னிக்கு டிவியோ நெட்டோ கிடையாது. எப்ப பார்த்தாலும் சினிமா தானா? நத்திங் டூயிங்"////

என்ன ஒரு அராஜக அடக்குமுறை, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் (ஹி.ஹி.ஹி.)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. இந்த தொலைகாட்சிப் பெட்டி வீட்டில் உள்ளவர்களின் இடையே இத்தனை தொலைவை ஏற்படுத்தி விட்டதே…. தவிர்க்க வேண்டிய விஷயம்…

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல பதிவு PSV சார் .......நான் T .V பார்க்க வில்லை இப்படி ஒரு பட்டி மன்றம் நடந்ததே தெரியாது .....இருந்தாலும் குழந்தைகளின் சந்தோசம் எதுவோ .....அதுவே என் சந்தோசம்

கருடன் said...

சார் அவங்களுக்கு மூட் இருக்க அப்பொ நீங்க விள்ளாடனும். உங்களுக்கு மூட் இருக்க அப்பொ அவங்க விள்ளாட மாட்டாங்க... என்னா ஒரு அடக்குமுறை உங்க வீட்டுல.. பாவம் பசங்க... :))

R.Gopi said...

இன்றைய காலகட்டத்தில் டி.வி.யும் குழந்தைகளும் பிரிக்க முடியாததாகி விட்டது....

//விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?)//

சத்தியமா இருக்காதுன்னு விஜயே சொல்றாரே....

சரி.... குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக நம் அடக்குமுறையை திணிக்கத்தான் வேண்டுமா என்ன? பண்டிகை நாட்கள் போன்ற தினத்திலாவது அவர்களை அவர்கள் இஷ்டம் போல் விட்டு விடலாமே....

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யப் பட்டிமன்றம்தான்...சேஷாத்ரி என்ற புதுமுக இளைஞர் நன்றாகப் பேசி கைதட்டலை அள்ளிக் கொண்டு போனதையும் அதை சுட்டிக் காட்டி அதையே அப்புறம் தன் பக்க பாய்ண்டுக்கு ராஜா பேசியதும் சுவை.
இழந்தது அதிகம் என்று தீர்ப்பு.